ஏதோ ஒருமுனையில்
தண்டவாளங்கள்
இணைந்துவிடக்கூடும்
என்ற நம்பிக்கையில்
தொடர்ந்து பயணித்துக்
கொண்டிருக்கிறது
தொடர்வண்டி...!!!-
அந்த சிறுமிக்கு பிடித்த நிறத்தில்
கடலன்று ஆடை அணிந்திருந்தது...
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு
சட்டென தண்ணீர் புட்டியில்
அள்ளிக்கொண்டு வந்து
மகிழ்ச்சியாய் கடலை,
செம்பில் நிரப்பினாள்...
அழுகை முட்டிக்கொண்டு வந்தது...
மீண்டும் எடுத்துச்சென்று
கடலோடு கடலை கலந்துவிட்டாள்
நிர்வாணக்கடலை நிச்சயம்
யாருக்கும் பிடிக்காதுதான்...!!!-
அத்தனை
ஆத்திரத்துடன்
சண்டையிட்டாலும்
தன்னுள்ளே
கரைத்துக்கொள்கின்றன
அலைகள்...!!!-
விடியும்வரை தொங்கவிட்டும்
கோபம் தீரவில்லையாம்...
மூழ்கவிட்டு மூழ்கவிட்டு
மூச்சடைக்க வைக்கிறார்கள்...
எந்த தவறுக்காக
இந்த தண்டனையென
சொல்லிவிட்டால் கூட போதும்
நிம்மதியாய்
இறைத்துவிட்டுச் செல்லும்
அந்த கிணற்று வாளி...!!!-
என் வேதனைகளைப்
பகிர்ந்துகொள்ள
யாரையாவது தேடிக் கொண்டிருக்கிறேன்...
இருட்டு என்னை
அரவணைத்துக் கொண்டு
அதன் அதீத வேதனைகளை
என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறது...!!!-
வெகுநாட்களுக்குப் பிறகு
சந்திக்க நேருகிறது....
வார்த்தைகள் வடிந்து அனிச்சையாய்
கைகள் மட்டும் உயருகின்றன...
அவளும் குறுநகையை
வீசிவிட்டு கடக்கிறாள்...
எங்கிருந்தோ வந்த காற்று
பழைய நினைவுகளை
முகத்தில் அறைந்துவிட்டு
கடக்கிறது...
எப்படி அத்தனையையும்
மறந்துவிட்டு இவளால் மட்டும்
இப்படி இயல்பாய்
இருக்கமுடிகிறது
என நினைத்துக்கொண்டே
திரும்பி பார்க்கிறேன்....
அவள் சென்றுகொண்டே இருக்கிறாள்...
சொல்லமுடியாது
அங்கே அவளும்
இதேக் கவிதையை
எழுதிக் கொண்டிருக்கலாம்...!!!-
பூச்சூடி பொட்டுவைத்து
பாவாடை சட்டையில்
அழகு பார்த்து
ஆனந்தம் அடைந்தீர்கள்...
இதையேதான்
நானும் செய்தேன்
வீட்டைவிட்டு
வெளியேற்றி விட்டீர்கள்...!!!-
பழுத்த மரமது வேர்விட்டு
செழித்த மரமது...
பழைய மரமது என்றும்
இளைய மரமது...
தனித்த மரமது
தரணியில் மிக
இனித்த மரமது...
பட்டுப்போல் மரமது
கடைசிவரை
பட்டுப்போகா மரமது
இப்பேற்பட்ட மரத்தின்
வேர்களை
வெட்டிவிட நினைக்கும்
வீணர்களுக்கு
தெரிவதில்லை - இதன்
வேர்களை அல்ல
இலைகளைக் கூட
இம்மியும் கிள்ள முடியாதென்று...!!!-