தனலட்சுமியின் மைந்தன்   (✍️ தனுவிஷ்ணு ✔️)
545 Followers · 456 Following

read more
Joined 9 February 2021


read more
Joined 9 February 2021

பழி வாங்குவதற்கெல்லாம்
நேரமில்லை.

அத்தனைக்குப் பிறகும்
கைகளில் மிச்சமிருக்கும்
சில விதைகளை பூக்கும் செடிகளாக்க
முயற்சித்துக் கொண்டிருக்கும்
சாதாரண தோட்டக்காரன் நான்

களைகளை மட்டும் பிடுங்கிவிடுவேன்.

-



நேரத்தை சுமக்க முடியாத
பெரும் பொழுதொன்றை லேசாக்கியது
தடமாய் மாறி இருந்த எறும்புகளின் நகர்வு.

-



சித்திரைத் திருவிழாவில்
மீனாட்சியாக ஃபாத்திமாவையும்,
ரம்ஜான் பிரியாணியை ராமசாமி வீட்டிலும்
தேவாலயத்திலிருந்து சேகுவேராவால்
பார்த்து ரசிக்க முடிகிறது

இந்த எளியவர்களுக்குத் தான்
எதுவுமே தெரிவதில்லை!!

எல்லையில் கட்டப்பட்டுள்ள
அரசியல் தடுப்புச்சுவரை
பல உயிர்களை பலி கொடுத்துக்
காக்க வேண்டாமா???

-



அளக்க முடியாத ஆழத்திலிருந்து
ஒருவழியாகத் தோண்டி
எடுத்துவிட்டார்கள்
மனிதத்தை

"முள்ளிவாய்க்காலில்"

அன்று இரத்தத்தை நிரப்பி
வரலாற்றுக் கவிதை எழுதிக்கொண்டிருந்த
ஒரு போர்க் கவிஞனின் வரிகள்
சற்று தாமதமாக அரங்கேறியது

உலகம் வியக்க
அரக்கர்கள் அடங்க

"பிராம்ப்டனில்"

-



பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியில்
இன்னும் ஆயிரம் பிரபஞ்சங்கள்
இருக்கலாம்.

நாமே ஒரு புள்ளியின் ஆயிரம் பிரபஞ்சங்களில்
ஒன்றில் கூட இருக்கலாம்.

விதிமுறைகள் வகுக்காதீர்கள்
இந்த எல்லையைத் தாண்டினால்
கைது செய்யப்படுவீர்கள்.

-



மரகதச் சிறகுகள்
*************************
அந்த இரண்டாம் சிறகினை விரிப்பதற்குள்
எத்தனையோ அழகான நினைவுகளை
ஒளித்து வைத்திருந்தாள் அந்தக் குட்டி தேவதை

ஒவ்வொரு நினைவும் ஒரு சிதறலாகி
மழைத்துளிகளாக மனதை நனைக்க
மறந்திருந்த பேனா முனைகளை நினைக்க வைத்தது

எங்கோ வறண்டு கிடந்த என்
எழுத்தாணிக்குள் உயிர்"மை"யாகி
சிதறிக் கிடந்த எழுத்துக்களை ஒவியமாக்கி
தூய வெண்புன்னகையின் முகவரிக்குள் புகுந்து
பட்டாம்பூச்சியாய் படபடக்கும்...

மனதில் சிரிக்கும் மரகத ஒளி
மழலை மொழி - அவள்
மன மொழிக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

-



பற்றி எரிந்த காட்டில்,
பாழ்பட்ட பச்சை மரக்காற்றில்
எஞ்சியிருக்கும் ஈர்ப்பதத்தைப் போல,

அத்துனை அழிவுக்குப் பின்னும்
இன்னும் இயற்கையிடம்
மிச்சமிருக்கும் கருணை.

அறம் வழிந்தோடும்
அந்தப் பாதையில் துளிர்த்திருக்கும்
அன்பிற்கு அழிவில்லை.❤️‍🔥

-



உண்மைகளை அழகாகத் தோற்கடித்து
பொய்களை எளிதாக வெற்றி பெறச் செய்து
அவமானங்களை அன்பாகப் பரிமாறிய இயற்கைக்கும்,

எதிர்பார்ப்புக்களை மறந்து
கசப்புக்களை மட்டுமே உண்டு
மரத்துப் போன மனதுக்கும்
இது புதிதில்லை,

உதடுகளில் உதிர்ந்த புன்னகையோடு,

கிழிந்து இரத்தம் தெறித்த
காயங்களின் வரிசையில் இது
இன்னொன்று என்றான்.

அறத்தினை மருந்தாக்கிப் கொண்ட
வழிப்போக்கன் ஒருவன்.

இருண்ட விழிகளின் மேல்
துளி நம்பிக்கையைத் தெளித்தது
அவன் வாழ்வியல்.

அறம் அவன் மனதின் நிறம்

-



பொன்னி நதியோரத்தில் நின்றிருந்தவனை

யாரோ அழைத்ததால்
திரும்பிப்பார்த்துவிட்டு

யாரும் இல்லாததால்
சற்று கண்களை மூடியபோது

மலர்களை விடவும் மெல்லிய ஸ்பரிசம்
மழையினை விடவும் ஆழ்ந்த கருணை
கடவுளை விடவும் உயரிய நெறி

உயிர்கள் அன்பால் நிரம்பி வழிந்தது
நதிநீர் முழுதும் ஆர்பரித்தது

எல்லாம் மொத்தமாய் உணர்ந்த தருணம்
ஆம் அவர்கள் வந்துவிட்டார்கள்

என்னையும் உடன் அழைத்துக் கொண்டு
சரயு நதிக்கரையை
சுற்றிக்காட்டினாள் அம்மை சீதை

கண்களைத் திறந்தேன்
காவிரி சிரித்துக் கொண்டிருந்தது
கரையோரத்தில் படர்ந்த தந்தையவரின் பாதங்களுடன்...🌷

-



துளிர்த்த மழையில்
கிளைவிட்டுப் பறக்க
சிறகினை சிலுப்பிய

அந்தப் பட்டாம்பூச்சிக்கும்
அவனுக்கும் இடையில்

எத்தனையோ மனிதர்கள்
படபடத்து ஓடிக் கொண்டிருக்க

அவனை அசையாமல்
நிற்கச்செய்த
அதற்குத் தெரியுமா..!

மரத்துப் போன காயங்களுக்கு
மருந்துகள் தேவையில்லை

ஆனாலும்
அந்த நிமிடத்திற்கு
அந்தக் காட்சி
அருமருந்தாகிப் போனது...☘️

அங்கு அப்போது
அவனும் ஒரு பட்டாம்பூச்சியும்
சில துளி மழையும்.

-


Fetching தனலட்சுமியின் மைந்தன் Quotes