கற்கள் பூரிக்க
அறிவு சுரக்கிறான்;
ஒளி படித்து
சாலை கடக்கிறான்;
ஒலி துறந்து
ஓயத் தெரிந்தவன்;
வாழத் தெரிந்தவன்;
வாயில் சகா!-
இயற்பெயரின் இணைப்பு, நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளவே..
... read more
கைமாறு கருதாது
செய்நன்மை யாவையும்
அண்டமே மறுத்தாலும்,
ஆழ்மனம் மறவாது
அங்கீகரித்து அணிவிக்கும்
அமைதி..
அலாதி!-
எத்தனை கனத்தையும்
கரைத்து மறைக்கிற
கருந்துளையின் அசல் ,
இவள் மனது தானா என்ன?
நிகழ்வு பரப்பெல்லைக்கு
மகிழ்வு காவல்!
-
கற்பதற்குச் சிலைகளும்
வீதிகளுக்கு விளக்குகளும்
போதாதா..
விண்மீன்கள் சிக்காத சிறைகள்
விலங்குகளுக்கா?-
நீலநிறக் கறை படியும்
பருத்திப் பட்டை விளம்பரங்களில்
அப்புறப்படுத்தும் அக்கறை
வெளிப்படுவதில்லை..
குப்பைக் கூளங்களில்
சிவந்த பட்டைகள் தாம்
சிதறிக் கிடக்கின்றன..
மாதவிடாய் பிரட்சனைகளை
மகவுகளிடமிருந்து மறைக்கிறோம்;
மகள் பூப்பெய்தியதை மட்டும்
விழாவாக்கி மகிழ்கிறோம்!
வீட்டு வேலைகளில்
ஆணும் பெண்ணும்
சமமாகத்தான் சிறக்கட்டுமே..
சம்பாதிப்பது மட்டும் தான்
"சொந்த காலில் நிற்பதா"?
வெளியே சமத்துவம் முளைக்க
விதைகள் என்னவோ
வீட்டில் தான்!
விரும்பி விதைப்போம்..
விருட்சங்கள் தழைக்கட்டும்!-
முக்கியமானவற்றை
முகம் பார்த்து சொல்!
புறம் ஏசாது,
அறம் பேசு!
உனக்கு வேண்டாததை
ஊரார்க்குச் செய்யாதே!
தனக்கு இல்லாத போது
தானம் செய்யாதே!
தவறுகளைச் சுட்டும் நட்பைத்
தக்க வைத்துக் கொள்!
நன்றி பாராட்டு..
நடுநிலை போற்று!
ஆற்றல் சேமி..
தூற்றல் பொறு!
கடிய முகத்தில்
உழைப்பின் அழகு காண்.
உணவைத் தொழுது உண்.
ஊகத்தில் அமைதி தேடாதே.
துரோகிகளின் பொய்மை இரசி.
துன்பத்தில் துணைகள் அறி.
நீயே உனக்கு உற்ற தோழமை!
நீயே உனக்குச் சிறந்த எதிரி!-
"பருத்திருந்தால்
மடியில் சிலையோ,
உடலில் சேலையோ,
பிணைக்கும் கயிறோ
காத்திருக்கும்!
கடல் பார்த்த வில்லா வாசல்
வண்ணக் குடை
வளர்ந்து நிற்பது போல
உரசும் கம்பிகள் சகித்து,
நெளிந்து நிற்கிறாய்,
விளம்பரப் பலகை தாங்கி..
உன் சிறு நிழல்,
போக்குவரத்து காவல் பணி,
தெருவுக்கே நீ தரும் அடையாளம்,
இவர்கள் கொள்ளும் அன்பு..
எல்லாமும் தான்..
எல்லாமும் தான்..
தென்னம்பாளை - குலையோடு,
உயிர்வளி அருளும் நீ
வீதி நடுவே
வீற்றிருக்கக் காரணங்கள்..",
பிதற்றும் வழிப்போக்கன் என்னிடம்
கீற்றுகள் கீச்சிடுகின்றன:
"போராளிகளைத் தெய்வங்களாக்கியே பழகிவிட்டீர்கள்..
போரைத் தவிர்க்கப் பழகுவது எப்போது?!"
உடனடி பதில் தான் இருக்கிறதே..
"விதைத்தவரைக் கேள்!"-
வெயில் வேளையில்,
வெற்றுப் புன்னகையைப்
பூசிக் கொண்டு,
உதிர்க்காத கண்ணீரை
விழிகள் பதுக்க..
விழுங்கிய சொல் தாளாது
நெஞ்சம் பதைக்க..
அன்பும் அவமானமும் ஒன்றாய்
உடலை உலுக்க..
எதுவும் புரியாது,
எவர் துணையும் இல்லாது,
அவள் நடக்கிறாள்..
"சேலை அழகு.."
எவனோ கத்திக் கடக்கிறான்,
வேறு யாருமற்ற சாலையில்!
வெற்றுப் புன்னகையையும் துடைத்து,
தன்னம்பிக்கை தடி எடுக்கிறாள்;
ஒலிகளுக்கும் சல்லடையிடுகிறாள்!
சலித்துக்கொள்கின்றன, முணுமுணுப்புகள்..-
அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றன..
ஆழ்ந்து பார்க்கத்தான் நாம் இருப்பதில்லை!
Miracles do transpire..
We just don't perceive enough!-
என்றேனும் ஒரு நாள் அவனை
முன்பு போல் காண்பாள் என்ற
எண்ணத்தில் மட்டுமே அவள்
இன்னுயிர் எஞ்சி இருக்க..
மாண்டவன் மன்னன் ஆனாலும்,
மீண்டவன் வருவதற்கு
வேண்டிய காலச் சக்கரம்
கண்மூடி கடக்கிறது!
மண் வெட்கிக் கிடக்கிறது!
எழுதப்படாத காவியங்களை
இரகசியமாய்ச் சேகரித்து,
இயற்கை எழுதுகிறது..
எங்கோ!
-