இறைவனின் கதையில்
நம்பிக்கையின் திரைக்கதையில்
அறிவின் வசனத்தில்
அன்பின் இசையில்
இயற்கையின் இயக்கத்தில்
தொடர்ந்து பரிணமிப்போம்
-
தானாக உதிர்ந்து விழவிருக்கும் இலைகளை தள்ளிவிடுகிறது காற்று
காற்றின் உதவிகொண்டு உதிர்ந்து கீழே காய்ந்து கிடக்கும் தன் இனத்துடன் ஒன்றுசேர முயற்சிக்கிறது இலைகள்
ஈரிரண்டும் உண்மை மற்றும் பொய்
என்றது இவைகளை இயக்கும்
புவிஈர்ப்பு விசை-
முற்றும் முருகென
பற்றும் முருகென உணர்ந்தேன்
நான் உணர்ந்தேன்
அற்றம் அருகினில் தொற்றும் நிலைதனை மறந்தேன்
நான் மறந்தேன்
பரம்பொருள் ஆனவரே
பருப்பொருள் ஆண்டவரே
ஞானமெல்லாம் உம்மைச் சேருமிடம்
அது எனதிதயம்
ஞாலமெல்லாம் உமது இடம்
அதில் என் உதயம்
அறிவியலே அனுபவமே
சுடரொளியாய் திகழ்பவரே
உலகது சுழல்வது உயிர்களும் பிறப்பது கொடுமையும் கொலைகளும் நிகழ்வதன் பொருளெது?
ஆறறிவானது ஆறுமுகம் அது அனைத்திலும் உயர்ந்தது மானுடம் பதிலது
அருள்வாய் அன்பே வேரைய்யா...-
அவளது விழிகள் வறண்டு வருடங்களாகிவிட்டது
அவளதிதயம் ஈரத்துடனிருந்தது இறந்தகாலமாகிவிட்டது
சிலையாகக் காட்சி தந்த தேவதை
கல்லானாள் கனவானாள்
என்றும் என் நினைவானாள்
ஆனால்...-
நான்காம் பரிணாமமான காலம் பிரபஞ்சத்தின் ஆதி ஒருமையிலிருந்து தொடர்ந்து அதனுடன் பயணிப்பது போல
அவளும் நானும்
எங்கள் காதல் பெருவெடிப்பு நிகழ்ந்ததிலிருந்து தொடர்கிறோம் சேராமலும் விலகாமலும்-
தற்கொலை செய்தலும்
தான் ஈன்ற பிள்ளையை கொலை செய்வதும் அதிஅறிவார்ந்த ஆறறிவு இனத்தில்
மட்டும் நிகழ்த்தப்படுவது
மழுங்கிப்போன பரிணாம அறிவு முதிர்ச்சியின் ஒரு பக்க அடையாளம்-
சிறைக்குள் சிறைப்பறவையாக இல்லாமல்
சுதந்திரமாக ஒரே இடத்தில் பறந்து மட்டும்
என்ன பயன்?
சிந்தனையெனும் சிறகு விரிந்தால் தான் பற(ர)ந்து பயணிக்க முடியும்-
ஒரு பெண்ணை
வன்கொடுமை செய்த கொலையாளிக்கு மரணமென்பதே மன்னிப்பு என்னும் பட்சத்தில்
வாழ்நாள் நீட்டிப்பிற்குப் பெயர்
ஆயுள் தண்டனையா?-
செயற்கை சூழலில் ஆய்வு(IN VITRO) செய்த அறிக்கையை கையில் கொண்டு அறிவின்மையால்
கோமியம்
இயற்கை மருந்து என்று கூறுகிறார்
இயக்குநர் (IIT)-
வருடத்தில் ஒருநாள் மட்டுமே நாம் பிறந்தநாள்
வாழும்வரை எல்லா நாட்களும்
நமக்காகப் பிறந்தநாட்கள்
-