"சாப்பிடும்போது நடுவுல எழுந்திருக்காதேனு
சொன்னா கேட்கவே மாட்டியா நீ..."
திட்டிக்கொண்டே இருப்பாள் பாட்டி..
இப்போது திட்டுவதற்கு பாட்டியும் இல்லை..
உட்கார்ந்துச் சாப்பிட நேரமும் இல்லை..-
நீயின்றி நானிருக்கும்
வலியை விட,
நானின்றி நீயிருக்கும்
வலி தான் என்னை
அதிகம் கொல்கிறது.-
குளிரில் உறைதல்
தூய்மையான
தேங்காய் எண்ணெயின்
பண்பாம்..
தூய்மையான மனிதனை
அறிய உதவும்
தட்பவெப்ப நிலையைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்..!
-
உனது கேள்வி
ஒருவரின்
தன்மானத்தைச்
சீண்டிப் பார்ப்பதாய்
இருக்குமாயின்,
கேட்பதற்கு முன்
பலமுறை யோசி.
அங்கே
அவமானப்படப் போவது
நீயாகவும் இருக்கலாம்.
அனைவருக்கும் முதுகுண்டு!
-ஜெயந்தி முருகன்.-
நீ என்னைப்
பிரிந்து சென்ற
அந்த நாளில்,
உன்னை ஈரமற்றவள்
என்றுச்
சொல்லியதாலோ
என்னவோ,
இன்று தினம்தினம்
எனக்குக் கண்ணீரைப்
பரிசளித்துக்
கொண்டிருக்கிறாய்...-
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்ச்
சிதறிக் கிடக்கும்
உன் நினைவுகள்.
அடுக்க நினைத்த
ஒவ்வொரு முறையும்
பரிசாய் கிடைத்தது,
வடுக்கள் மட்டும்.
தொடப்போவதில்லை
இனியுமுன் நினைவுகளை
என முடிவெடுத்து
நகர முயல்கிறேன்.
என்னை முட்டாள்
என்று கூறிச்
சிரிக்கின்றன
உன் நினைவுகள்.-
மூடநம்பிக்கைகள்
இல்லாத போதும்,
பயிர்களைப்
பார்க்கும் பொழுதுகளில்
கைகள் தானாக
திருஷ்டி கழிக்கிறது,
அவைகள்
(கண்)பட்டுவிடக்
கூடாது என்று.-
கண்கள் ரெண்டும் காதல் பேச
மூக்கும் முனைப்பாய் வாசம் தேட
கைகள் உன்னை அணைக்கத் துடிக்க
அனலாய்ச் சுட்டாய் குளம்பி நீயே!
-