துவண்ட உடற்சுமை அவன் தேகத்தில் தாழ,
தாழ்ந்த கைகள் அவன் மேனி சூட,
சுடும் கண்ணீர் அவனுள்ளே கரைய,
மூடிய கண் இமைகளோடு அவன் மார்க்குழல் சுருள,
இருள்சூழ்ந்த அவ்வறையில் அவன் துடிப்பு அவள் தாலாட்டு, துடுத்தெழும் மார்பது அவள் தூளி...-
உனை கண்டதும்
இரவும் விடியலாய்
மாறித்தான் போனதே..!
'கனவில் அணங்(கு)கவள் '-
நிலவும் புவியும்...
நீ நெளிந்தும் நெகிழ்ந்தும்...
என் அலைகள் உயர்ந்தும் தாழ்ந்தும்...
ஈர்ப்பில் தொடரும் காதல் மோகம், இணைவில் முடிவதில்லை...-
உண்ண மறுத்துவிட்டேன், உதட்டில் படும் விரலது உன் இதழை நினைவூட்டி வருத்துவதால்...
உறக்கத்தை துறந்துவிட்டேன்,
சிதையுஞ் சித்தம் கனவிலும் உன்முகத்தை காட்டுவதால்...
புறம் செல்ல புறக்கணித்தேன்,
பாவிக் கண்கள் உனைத் தேடியலைவதினால்...
அகத்திலும் ஆறுதலிழந்தேன்,
கூடியபொழுதில் வரைந்த ஓவியங்கள், என்னைக் கண்டு நகைப்பதினால்...
இப்புவியில் அசையும் அனைத்தும் அள்ளி ஊட்டுகிறது உன் நினைப்பை...
செவ்வானில் மறையும் சூரியனும் சிவக்கிறது, என் ஆசை எண்ணங்களை எட்டிப் பார்த்து...
நிலவும் இருலளித்து வதட்டுகிறது என் விரகத்தை...
ஆவி கலக்கும் காற்றதுகூட, உன் காதலை நினைவூட்டி உயிரைக் குலைக்கிறது...
இவையனைத்தினின்றும் ஓடி ஒளியும் எண்ணம் தான்... ஆனாலும் ஒரு தயக்கம்....ஒளியும் நொடியில் நீ வந்தால்..?
-
நுகர்ந்து விளித்தர் மணமென்னவோவென -
மழை நீர் மண் புகுந்த மணமென்றேன்
துகிலகற்றி திகைத்தர் குறியென்னவோவென- பசித்த
பிள்ளை படுத்திய பாடென்றேன்
எள்ளி நகைத்தனர் சோர்வெதற்கோவென்று
இரவில் கண்ணுறங்கா கடலலையை கண்டு இளைத்தேனென்றேன்
விரகமென்றால் அல்லலென்று சிரித்தர் - மனமோ
பக்தியென்றால் புனிதமன்றோவென உரைத்தது
-
சிறுக்கோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கென தவிக்கும் வான் ;
காதல் சுமையேந்த உளைந்துத் துடிக்கும் புவி ;
இவ்வாறு, பூமியே காதலில் கலவரப்பட்டுக் கிடக்கையில், இவையனைத்தையும் பொருட்படுத்தாது, பேருந்தை எதிர்நோக்கும் விழிகள்;
பொதியைச் சுமக்கும் பேருந்து...
#மாநகரம்-
காற்றில் மிதந்த கவிதையொன்று...
சிறு வயதில் விளையாட்டாய் சிந்தித்த வரிகள் சில - காலப்போக்கில் கனத்து நின்றது.
காகிதத்தில் வடித்தால் அதன் உன்னதம் குறையுமென - மனம் எழுத மறுத்தது.
எவனுக்காக எழுதப்பட்ட வார்த்தைகள் என அறியாவிடிலும் - உதடுகள் இரகசியம் காத்தது.
குறைகூடிய உலகில் அரங்குறையா குணசீலனை - கண்கள் தேடி அலைந்தன.
புதுமுகம் கண்ட ஒவ்வொரு முறையும் பிழைக்கு அஞ்சி - கால்கள் பின்னோக்கி அடியெடுத்தன.
ஒருமுறை மலரும் மலர்போன்ற அக்கவிதையை சரியான கரம்சேர்க்க - கற்பு கடமை காத்தது.
மனதில் விதைத்த கவிதையது விரகத்தின் வலுவில் கூடுபிரியாதிருக்க - உயிர் நாடி துடித்தது.
வயதெனும் தீயுடன் விரகக் கட்டைகளிணைந்து, அச்சம் உடைந்து, வேட்கையுடன் வெளியாயின வார்த்தைகள்....
அதோ தொலைவில் தெரிகிறது காற்றில் மிதக்கும் கவிதையொன்று..!
எவரின் காதுமடல்களை அடையப்போகின்றன அவை?
செவிசேர்ந்து, கேட்டோரின் உதடுகள் பூரித்து தான் மலருமோ?!
அல்லது நாசிவழி பாய்ந்து உயிர்கலந்து புணருமோ?!
அவரின் துயரத்தில் குழல்வருடி செல்லுமோ...அல்லது வெற்றி பெருமூச்சில் கலந்து அது கருவம் கொள்ளுமோ?!
நாடிகலந்தால் நன்றி மறக்காமல் தன் பேர் சொல்லுமோ...அல்லது கவிதைப் புனைந்த இந்த உதடுகள் விசனத்தில் மடிந்து கவிழுமோ?!
--
காத்து காத்து வளர்த்த கவிதையினை கைநழுவவிட்டு பரிதவிக்கும் தலைவி-