நான் கொடுக்கிற ஒரு ரோஜா
மலரை வாங்கிக் கொண்டு
சப்தமில்லாமல் தனியாக
வெகுதூரம் நீ நடப்பது கூட
உன் அன்பு தான்.
நான்,
தான் புரிந்து கொள்வதே இல்லை. 😊-
அன்பின் வெளிப்பாடாய் நான் ஒரு
ரோஜாவை உனக்கு தருகிறேன்.
நீயோ வெண் ஆம்பல்
ஒன்றை பரிசளிக்கிறாய்.
ரோஜாவை ஏன் தரவில்லை என்று
குழப்பமாகிறேன்.
சண்டையிடுகிறேன்.
மன்றாடுகிறேன்.
அன்பின் மலர் எப்பொழுதும் ஒரு
ரோஜாவாக இருக்க வேண்டிய
அவசியமில்லை. அவ்வாறாக,
அன்பானது விரிந்த மலராகவோ
அல்லது மலராகவோ கூட இருக்க
வேண்டிய நிர்பந்தமில்லை.-
நீ காதலிக்காவிட்டால் என்ன?
நான் நேசிக்கிறேன்.
அதை நம்புகிறேன்.
அதனால் நான் காத்திருக்கிறேன்.
உன்னை தொந்தரவு செய்யாமல்
எவ்வளவு தூரம் உன் நிழலை
பின்தொடர முடியுமோ
அவ்வளவு தூரம் பின்தொடர்வேன்.-
நீங்கள் இருவரும்
நண்பர்களா?
யாரோ ஒருவர் கேட்கிறார்.
என் அந்தரங்கங்களை
ஒரு நிழல் ஸ்பரிசிப்பது போல்
இருக்கிறது அந்த கேள்வி.
ஒரு உறவுக்கு பெயரிட்டு
கொள்வதென்பது
அவ்வளவு அவசியமா?
நிச்சியமாக,
நான்
அவர்களின் நண்பன் இல்லை.-
எதேச்சையான ஒரு
சந்திப்பில் ஒருவன்
உன்னை பற்றி
என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறான்.
இப்படித்தான்,
ஒரு கணம்,
ஒரு சூழல்,
ஒரு நபர்,
ஒரு வார்த்தை,
மீண்டும் மீண்டும் என்னை
அந்நியமாக்கி கொண்டிருக்கிறது.
இன்னும் எத்தனை
நிழல்களை நான்
கவனமாக கடக்க வேண்டுமோ?-
ஒரு மலை உச்சிக்கு
கடவுளை தரிசிக்க
சென்றிருந்தேன்.
வான் நோக்கி
கை கூப்பி
தொழுதும் அவன் வரவில்லை.
சோர்ந்து போய்
சமவெளிக்கு திரும்பினேன்.
" பாப்பாத்தி அம்மாள் "
பச்சணக்கடையில்
பச்சணம் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
கடவுள்.
இப்போது எனக்கு அவனை
பார்க்கவே தோன்றவில்லை.-
அயர்ந்து கிடக்கும் எனை
தட்டி எழுப்பி,
அருகே அழைத்து,
எந்த வித நிபந்தனையுமின்றி
எப்போதும் போல
மிக இறுக்கமாக கட்டி
அணைத்துக்கொள்.
என் விசும்பல் சத்தத்தை
பற்றி கூட கேட்காதே.
அணை உடையும் முன்பு
தடுப்புகளை திறந்து விட வேண்டும்.
அவ்வளவுதான்!
அதற்காகத்தான்!-
உனக்கு என்னதான் வேண்டும்?
என்று கேட்கிறாய்.
நான் கேட்பதை ஒரு போதும்
நீ தரப்போவதில்லை என
எனக்கும் தெரியும்,
உனக்கும் தெரியும்.
சரி இருக்கட்டும்!
இந்த கணம்
ஒரு பட்டாம்பூச்சியாக மாறி
இறுதியாக
என்னை அணைத்துக்கொள்,
உன் வானில் கொஞ்சம்
எனை பறக்க வை.
பிறகு,
உன் விருப்பம்.-
Ambivalent
For a while I feel like everything is perfect. The next moment the confidence in it dissipates. again I believe it....-
பெரிய சமூக சீர்திருத்தவாதி..
பெரியாரிஸ்ட்.. சாதி ஒழிப்பாளன்..
அவன் வீட்டு கொல்லைப்புறத்தில்..
ஒர் ஓரத்தில்,
கிழிந்த புடவையுடன்,
குத்துக்கால் இட்டு,
பாலித்தீன் கவரின் மேல்,
நேற்றைய நொதி சோற்றை
அமிர்தமாய் உண்கின்றாள் "நடவாள்" என்ற பெயருடன் கிழவி ஒருத்தி..
சத்தியமாக அங்கு சாதி இல்லை....-