கடந்த காலத்தின் கனவுகள்
நிகழ்காலத்தின் நினைவுகளாய்
எதிர்காலத்தின் எண்ணங்களாக
முக்காலமும் கடக்கிறேன்
என்னைத் தழுவிடும்
உன் கற்பனைகளோடு!!
--- முப்பொழுதும் உன் கற்பனைகள்!!!-
காத்துக் கொண்டிருக்கிறேன்
கதிரவனைக் காண!
விழித்துக் கொண்டிருக்கிறேன்
விடியலைக் காண!!
கடந்து போகும் காலங்கள்
என் கையில் இல்லை - இருப்பினும்
வசந்தம் கொண்டு வரும்
விடியல் தூரமில்லை!!-
குன்றில் நின்ற
குமரன் அறிவானா
நானறியேன்..
ஆனால் குன்றில் வீசும்
தென்றல் காற்றும்
தேகம் சூடேற்றிச் செல்லும்
இன்று நானறிந்தேன்..
அழகியல் கொண்டு
அகம் பறித்துச் செல்கிறாய்..
அங்கம் அசைவற்று
அனுதினமும்
அவதிப்படுகிறேன் நான்..
கூதல் காற்றில்
காதலால் காய்ச்சல் கொள்கிறேன்..
தேயிலை வாசத்தில்
தேகம் கூச
தேநீர் சுவைக்கும் நாள் எந்நாளோ..!!
ஆணும்
நாணம் கொண்டு
நங்கை கரம் பற்றும் நாள்
நன்னாளோ..!!-
நிலவென்று
நங்கையை நினைக்க நீங்கள் யார்.?
மயிலென்று
மையலை மதிப்பிட நீங்கள் யார்.?
அழகென்று
அவளை அளவிட நீங்கள் யார்.?
பூ என்றும் பூமி என்றும்
பெண்மைக்கு பெயரிட நீங்கள் யார்.?
அவளின்றி அகிலத்தில்
அணுகூட அசைவதில்லை என்ற
அடைமொழிகளும் தேவை இல்லை.!
இறுதியில் அவள் பெண்தானே என்ற
அவப்பெயர்களும் தேவை இல்லை!!
அவள் அவளாகவே இருந்து விட்டு போகட்டும்.!!
இப்படிக்கு இவளாக!!-
காலாற நடந்தாலும்
கப்பல் ஏறி கடந்தாலும்
கடந்து வந்த பாதையினை
கண்டும், காணாமல்
நிமிர்ந்து நின்றதும்
கேலி செய்ய கூட்டம் தேடிவரும்!
காணாது போ!!
கலங்காமல் களத்தில் இரு!!!
முட்பாதையில்
நீ முன்னேறி செல்கையில்
முடங்க வைக்கும் மொழிகள் உன்னை
முந்திச் செல்லும்!
முள் என அதை
மிதித்து போ!!
முயற்சியுடன்
களத்தில் இரு.!!!
வீணாக போனாய் என
வீணர்கள் வாய்மொழி
வீரியத்துடன்
வதைக்கும்!
விட்டுச் செல்!!
விதையாய் விழுந்தோம் என
விருட்சமாய் வளர்வோம் என
விலகாமல் களத்தில் இரு!!!
விடியலில் உன் வெற்றி
விண்ணைத் தொடும்!!!!-
விட்டு விட்டு
முத்தமிடும்
மழைத் தூரலில்
கொஞ்சம்
கிறங்கித்தான்
போகிறாள்
மண்மகள்!!-
உங்கள்
நிஜங்களை
என்னிடம் தேடாதீர்கள்.!
நான் ஒரு கற்பனை!!
உங்கள் வண்ணங்களை
என் வானவில்லில்
உமிழாதீர்கள்.!
நான் வெறும் வர்ணனை!!-
கசக்கி எறிந்தபின்
கவிதை மீண்டும்
கையெழுத்து பெறுமோ!?
காதலும் மீண்டு
கரைகண்டு சேருமோ.!?-
உன் உதடுகள்
உதிர்க்கும்
ஒரு சொல்லில்
என் உதிரம்
உணர்விழந்து
ஓட மறுக்கும்!!
உலகம் நீயென
உருவகமான பின்
ஓடும் நேரமும்
என் உயிரைக் குடிக்கும்!
கண்கள் கலந்த பின்னர்
கால்கள் செல்லும் தூரம் வரை
காதலும் காலத்துடன்
சேர்ந்தே பயணிக்கும்!!-
விண் இடும் தூறல்அதில்
கை கோர்த்து நடக்க,
விழி இடும் தூறல்தனை
துடைக்கும் கரங்களை
எதிர்பார்த்து நனைகிறது
பேதை மனம்..!!-