🐶 பவ் பவ் 🐶
🐶கைபிடியளவு அன்பு வேண்டாம்
விழியளவு கருணையும் வேண்டாம்
சின்னப் புன்னகை மட்டும் போதும்
இந்நாளும் எந்நாளும் இனிதாகும்🐶
-
மிதுன் 💜 ராசிகா
சொல்லறம் போற்றி செறிவுடன் வாழ்க
மனையறம் போற்றி மகிழ்வுடன் வாழ்க
நல்லறம் போற்றி நன்மதிப்புடன் வாழ்க
இல்லறம் போற்றி இறுமாப்புடன் வாழ்க
— % &மிதுன் 💜 ராசிகா
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நலமுடன் வாழ்க
இருவரும் மனமொத்த இணையராக காதலுடன் வாழ்க
முத்தமிழாய் குன்றாத இளமையுடன் மகிழ்வுடன் வாழ்க
நாற்குணங்கள் அறிவு நிறை ஓர்ப்பு உறுதியுடன் வாழ்க
ஐவகை நிலங்களில் காலூன்றி பெரும்புகழுடன் வாழ்க
அறுசுவைகளேற்று வாழ்வில் ஆரோக்கியமுடன் வாழ்க
ஏழுவண்ணங்களுடுத்தி நேர்மறை சிந்தையுடன் வாழ்க
எட்டுதிக்கும் வெற்றிக்கொடிகள் நட்டு வளமுடன் வாழ்க
ஒன்பான்சுவை கடந்து என்றும் நடுவுநிலையுடன் வாழ்க
நிறை குறைகளை ஏற்றுக் கொண்டு புரிதலுடன் வாழ்க
நல்லமக்கள் பெற்று பெருமையுடன் வாழ்வாங்கு வாழ்க
சுற்றமும் நட்பும் சூழ அன்பைக் கூட்டி இன்பமுடன் வாழ்க
இன்பதுன்பம் கடந்து நம்பிக்கையுடன் துணிவுடன் வாழ்க
திட்டமிட்டுச் செலவு செய்து எந்நாளும் களிப்புடன் வாழ்க
மனையறம் போற்றி என்றென்றும் மேன்மையுடன் வாழ்க
பதினாறு பேறுகள் பெற்று பூவுலகில் பெருவாழ்வு வாழ்க!!
— % &-
என்றென்றும் எனது அன்பிற்கினியவள்
எண்ணம் வடிக்கும் கவியரசியடி கண்ணம்மா-நீ
எரிகதிராய் ஒளி வீசும் தாரகையடி கண்ணம்மா
எய்யாமை நீக்கும் மதிவதனியடி கண்ணம்மா-நீ
எழிலி பொழியும் பெரும் மழையடி கண்ணம்மா
எண்மை பூட்டிய தமிழன்னையடி கண்ணம்மா-நீ
எக்காளம் முழங்கும் வெற்றிகீதமடி கண்ணம்மா
எறுழ்வலி உடைய மகாசக்தியடி கண்ணம்மா -நீ
எழுத்தில் எழுச்சியூட்டும் பாரதியடி கண்ணம்மா!!-
கவியருவி குமுதா செல்வமணி..
குடமலையாட்டி பொன்னியடி கண்ணம்மா- நீ
குழகு எழில் சூடிய வைதேகியடி கண்ணம்மா
குமரித் திற்பரப்பு கோதையடி கண்ணம்மா- நீ
குதூகல மூட்டும் சிறுவாணியடி கண்ணம்மா
முகில் தீண்டும் மேகாலயமடி கண்ணம்மா -நீ
முத்தமிழ் இசைக்குமகத்தியமடி கண்ணம்மா
முருகு சேர்க்கும் தூவானமடி கண்ணம்மா - நீ
முன்னிலை வகிக்கு மிலக்கமடி கண்ணம்மா
தாகம் தீர்க்கும் தேன்தமிழடி கண்ணம்மா - நீ
தாயாகி தாங்கும் தலைமகளடி கண்ணம்மா
தாலாட்டு பாடும் வெள்ளியடி கண்ணம்மா- நீ
தாளாண்மை யுடை ஐந்தவியடி கண்ணம்மா
செம்பொனழகு சமுத்திரமடி கண்ணம்மா - நீ
செல்லச் சிரிப்பு பழத்தோட்டமடி கண்ணம்மா
செம்மைப்படுத்தும் வல்லமடி கண்ணம்மா-நீ
செம்மாந்து பாடும் செண்பகமடி கண்ணம்மா
வட்ட நின் முகம் பால்நிலவடி கண்ணம்மா - நீ
வண்மை சேர்க்கும் துர்க்கையடி கண்ணம்மா
வரமாய் கிடைத்த கடம்பியடி கண்ணம்மா - நீ
வண்ணமூட்டும் சித்திரக்கூடமடி கண்ணம்மா
மனதை மயக்கும் கங்கையடி கண்ணம்மா -நீ
மணிமுத்தாறு மாஞ்சோலையடி கண்ணம்மா
மழைப் பொழில் தேவதையடி கண்ணம்மா -நீ
மகிழ்ச்சியூட்டும் கவியருவியடி கண்ணம்மா!!-
அம்மா..
அன்பை அள்ளித்தரும் பராபரம்
ஆணிமுத்துக்கள் ஈன்ற சலதரம்
இன்சுவைக் கூட்டும் அதிமதுரம்
ஈத்துவக்கும் அட்சயப் பாத்திரம்
உயிர் வளர்க்கும் தாரக மந்திரம்
ஊனுடம்பு வார்க்கு மமிர்தசாரம்
என்றூழாக ஒளிரும் நட்சத்திரம்
ஏந்திழை முகிழ்நகை கணவீரம்
ஐயனுமாக வாழும் விசித்திரம்
ஒயிலாக வலம்வரும் ஒய்யாரம்
ஓயாது உழைத்துச் சிவந்த கரம்
ஔவைமொழியாளின் வசீகரம்
அண்டசரா சரத்திற்கும் ஆதாரம்
ஆராவமுதிற்குச்சூடிடு புகழாரம்-
கரிச்சான் குருவி
கருப்பு வண்ணக் குருவியாம்
கருவெட்டுவாலி பறவையாம்
உருவத்தில் சிறு குருவியாம்
பருந்தையும் கூட விரட்டுமாம்
தைரியம் மிகுந்த குருவியாம்
பெரிய கழுகுகளு மஞ்சுமாம்
அச்சம் இல்லாதக்குருவியாம்
பூச்சிகள் பிடித்து தின்னுமாம்
வேட்டையாடுறக் குருவியாம்
வெட்டுக்கிளிகளின் எமனாம்
பயிர்கள் காக்கும் குருவியாம்
வயக் காட்டிலிதை காணலாம்
வால் நீண்ட கருங் குருவியாம்
கால்நடை மீது பவனி வருமாம்
எல்லை காத்திடும் குருவியாம்
தொல்லை தந்தால் தாக்குமாம்
இன்னிசை பாடும் குருவியாம்
மின்கம்பி அதற்கு ஊஞ்சலாம்
நன்மைகள் புரியும் குருவியாம்
வன்மை கொண்ட வலியனாம்!!-
நேற்றொரு கனாக் கண்டேனே
டெடியுடன் வானில் பறந்தேனே
நட்சத்திரப் பூக்கள் பறித்தேனே
மேகத்தின் மேலே மிதந்தேனே
நிலவிற்கும் சென்று வந்தேனே
இன்றும் ஓர் கனாக் கண்டேனே
செவ்வாய் கிரகம் சென்றேனே
நெல்லை யங்கு விதைத்தேனே
பயிர்கள் விளையக்கண்டேனே
மகிழ்வில் துள்ளிக்குதித்தேனே
கனவுகள் துரத்திச் செல்வேனே
விஞ்ஞானம் கற்றுத்தேர்வேனே
விண்கலனில் சுற்றி வருவேனே
விண்வெளி ஆய்வு செய்வேனே
கனவுகள் இல்லாமல் விடியாதே!
-
அண்ணா அண்ணா அண்ணா
கோபம் உனக்கு ஏன் அண்ணா
கடுகடு வென பேசுவது ஏனோ
சிடுசிடுவென விழுவது ஏனோ
நீ தூங்கும் போது அடித்தேனோ
உன் பொருளை யெடுத்தேனோ
படபட வென பொறிவது ஏனோ
தைதை யென குதிப்பது ஏனோ
அண்ணா அண்ணா அண்ணா
கோபம் உனக்கு ஏன் அண்ணா
குடுகுடு வென ஓடி வாண்ணா
ஜில்ஜில் ஐஸ் தரவா அண்ணா
மூச்சுப் பயிற்சி செய் அண்ணா
நூறுவரை எண்ணிடு அண்ணா
கிச்சுகிச்சு மூட்டிடவேனண்ணா
கலகலன்னு சிரிச்சிடு அண்ணா
அண்ணா அண்ணா அண்ணா
ஆடிப்பாடி மகிழ்வோ மண்ணா!!
-
புத்தகத்தை நீயும் பிடி
புத்தியைத் தீட்டிடப் படி
புத்தகத்தை நீயும் பிடி
சித்தம் தெளிந்திடப் படி
புத்தகத்தை நீயும் பிடி
தத்தம் தகுதி உயரப் படி
புத்தகத்தை நீயும் பிடி
உத்வேகம் கொள்ளப்படி
புத்தகத்தை நீயும் பிடி
புத்தாக்கம் படைக்கப்படி
புத்தகத்தை நீயும் பிடி
வித்தகம் பெற்றிடப் படி
புத்தகத்தை நீயும் பிடி
முத்திரைப் பதிக்கப் படி
புத்தகத்தை நீயும் பிடி
சொத்தாக எண்ணிப்படி
புத்தகத்தை நீயும் பிடி
நித்தமும் தவறாமல் படி
புத்தகத்தை நீயும் பிடி
புத்தகமாய் மாறிடப் படி!!-
புன்னகை ஒளிரும் மென்சிரிப்பு
பொன்நகை குன்றும் ஜொலிப்பு
வெள்ளந்தி மழலையின் சிரிப்பு
வெள்ளை நிறமே வெடிச் சிரிப்பு
மகிழ்ச்சியில் பூக்கும் புன்சிரிப்பு
மஞ்சள்நிறமே மந்தகாசச்சிரிப்பு
கர்வம் உமிழும் ஆணவச் சிரிப்பு
கறள் நிறமே அகங்காரச் சிரிப்பு
நம்பிக்கை தரும் குமிண் சிரிப்பு
நல்சிவப்பு நிறமே குறுஞ்சிரிப்பு
வாகை சூட்டிடும் சாகசச் சிரிப்பு
வான்நீலநிறமே ஏகாந்தச்சிரிப்பு
கேலி கிண்டலும் ஏளனச் சிரிப்பு
காளிமம் நிறமே நமட்டுச் சிரிப்பு
ஆனந்தம் தரும் செல்லச் சிரிப்பு
ஆரஞ்சு நிறமே அதிகாரச்சிரிப்பு
சிந்தை கவரும் சங்கீதச் சிரிப்பு
செப்புநிறமே அலங்காரச்சிரிப்பு
புன்னகை ஒளிரும் மென்சிரிப்பு
புத்துணர்ச்சி தரும் முறுவலிப்பு!!-