நான் நானே   (தமிழ்)
389 Followers · 2 Following

read more
Joined 13 December 2017


read more
Joined 13 December 2017
3 AUG 2023 AT 11:23

தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன தனதான

நொறுங்கிய நெஞ்சம் வழங்கும் உன்னிடம்
அடிபணிந் திட்டும் வெறுப்பு என்னிடம்
தருகிற தெய்வம் கடம்பன் என்பது சரிதானா
இதுவரை உள்ளம் புசித்த துன்பமும்
எதுவரை இன்னும் தொடர்ந்து என்னுடல்
அழிக்கிற உச்சத் திறத்தைப் பெற்றிடும் பெருமானே

கவலைகள் மட்டும் எனக்கு என்னிழல்
நிலையென முன்பின் படர்ந்து வந்திட
இருந்துமென் பக்தித் துளிர்த்துக் கொள்வது புதிர்தானே
மடமைகள் செய்யும் மனத்தில் அற்புத
கடமைகள் சொல்லித் திரிந்த கந்தனை
உடமைகள் என்றும் கழற்றி விட்டது பிழைதானே

அறுமுக அப்பன் உணர்வை வென்றதும்
சிறுமுகம் பண்ணும் தவற்றைக் கொன்றதும்
பழையது என்னும் நினைப்பு நின்றிட துணைவாநீ
உடன்வரும் பிம்பம் மறக்க செய்தொழில்
மறந்தவர் கொள்ளும் இழுக்கை நித்தமும்
உயிருடல் பெற்றுத் தவித்து நிற்பது இனிவேண்டாம்

உனைவிட இன்பம் இறந்து விட்டது
உறைவிடம் எங்கும் மறைந்து சுட்டது
அமைதியின் வெப்பம் தணிந்து கெட்டது பகவானே
அழுதிடும் கண்கள் கனிந்து நிற்குது
தொழுதிடும் செய்கைத் தளிர்த்து நிற்குது
எழுதிடும் சொல்லுன் புகழ்கள் விற்குது சுகமாக்கேன்...
_செ.ப.பார்த்தீபன்...

-


12 JUL 2023 AT 9:34

பேரானந்த மல்லிகை

-


12 JUL 2023 AT 9:32

உண்மையை நாடு உனக்கானதைத் தேடு
புன்னகை பாடு நிம்மதியில் ஆடு
இதயம் கிழிக்கும் சிந்தனை அழிக்கும்
அறிவால் வளர்க்கும் இன்பம் துளிர்க்கும்

எதுவர வேண்டுமோ அதுவந்து சேரும்
எதுவிட்டு போகுமோ அதெல்லாம் போகும்
உனக்கு நீயே போடாதே வேடம்
போதும் கற்றுக் கொண்டாய் பாடம்

போன உறவால் கொள்ளாதே துறவு
ஞான விழிக்கு செய்வாய் திறவு
இரவின் நிழலில் புலம்பியது போதும்
முடிவு எடுத்தாலே சிரிப்பலை மோதும்

அமைதியை பாதைத் துணையாய் சேர்த்து
குறிக்கோளை விழியிலும் இமையிலும் ஏந்து
நினைவுக் குறிப்பில் பழையன அகற்று
இனிமை நிறைக்கும் புதுமை புகட்டு

நீண்டு கிடக்கும் கரும்பலகை வானம்
உனக்கான வரலாற்றை எழுது நாளும்
காற்று முழுவதும் மீட்டிடும் கானம்
உனது புகழை பாடட்டும் நாளும்

தலைநிமிர்ந்து உயர்த்தி பார்க்கட்டும் உன்பிம்பம்
அந்நாளே நீயடைந்த உயிர்பிம்பம் மெய்பிம்பம்
நடந்தது சிறிது கடந்துசெல் தெளிந்து
வாழ்க்கை பெரிது வாழ்வாய் புரிந்து...
_மொ.ப.பார்த்தீபன்...

-


12 JUL 2023 AT 9:31

மண்பிள்ளைக்கு மேகத் தாயூட்டும் தாய்ப்பால்
மரங்களுக்கு வானம் தருகிற குளிர்பானம்
கட்டிடங்களைக் கழுவ படையெடுக்கும் சிற்பி
குடையென்ற பேரம்பேத்தியை குளிப்பாட்டும் பாட்டி

காயவைத்த துணிகளைப் பொறுத்தவரை சக்காளத்தி
பற்றி ஊர்கிற நெருப்புக்கு மாமியார்
வாடும் பயிர்களுக்கு எல்லாம் அமிழ்தம்
பரிந்த பயிர்களுக்கு எல்லாம் கொல்லி

சன்னல் வழியே பார்ப்பவர்க்கு வேடிக்கை
தெருவோரம் கடையை வைத்தவர்க்கு சாபம்
சிப்பிக்கு தெய்வம் இட்ட பிள்ளை
கருவாடு யாவையும் வெறுக்கும் சின்னம்

தலைவர்களின் சிலையழகுக்கு போடப்பட்ட காவல்
திறந்தயெண்ணெய் குடுவைகளுக்கு எப்போதும் எதிரி
மண்வாசம் பரப்பும் புரட்சிப் படை
மின்சாரக் கருவிகளுக்கு பரம்பரைப் பகைவன்

விடுமுறை தருவதால் குழந்தைகளின் செல்லம்
குண்டுகுழி மூடுவதால் சாலைகளின் மருத்துவர்
திருமண தம்பதிக்கு கெட்ட சகுனம்
நாற்று நடுபவர்க்கு நல்ல சகுனம்

தாம்பத்யம் தூண்டும் கலவி மாத்திரை
வயதான மக்களுக்கு எமனின் யாத்திரை
வாடித் துடிக்கும் பாலைக்கு தீர்த்தம்
பாடிப் பறக்கும் பறவைகளுக்கு நிறுத்தம்

முதிர்ந்தபூவை அழவைக்கும் திறமையான கதைசொல்லி
குளங்குட்டையின் மீன்முட்டையை பிரசவிக்கும் மருத்துவச்சி
ஆடி அசையும் மானுக்குத் திருவிழா
இலைபின்னே நிற்கும் எறும்புக்கு தவவிழா...

#மழை...

_மொ.ப.பார்த்தீபன்...

-


12 JUL 2023 AT 9:30

ஒருதினம் ஒரு ஓரபார்வை:

-


12 JUL 2023 AT 9:27

மற்றவர்களை விழிகள் புழுக்களாய் பார்க்கிறது
ஏவல்களைச் செய்யும் அடிமைகளாய் பாவிக்கிறது
தனக்குத் தானே கிரீடம் சூட்டுகிறது
தன்னையே ஒருதீர்க்க தரிசியாக காட்டுகிறது

பாதமலரை பணியச் சொல்லி வற்புறுத்துகிறது
கீழ்ப்படியாத எல்லாரையும் கருவறுக்க வலியுறுத்துகிறது
சொற்ப அறிவை சிற்பமாய் நினைக்கிறது
கற்றறிந்த மூத்தோரையும் மட்டமாய் நடத்துகிறது

தன்னைமட்டும் சரியென்கிற மாயை உருவாகிறது
முன்னுள்ள யாவரையும் மூடத்தனமாய் பேசுகிறது
அதிக பிரசங்கித் தனத்தை வளர்க்கிறது
அதனை ஏற்காதவர் நட்பைத் தளர்க்கிறது

புதிதாய் எதையும் கற்க மறுக்கிறது
விதிகளை மீறும் செயல்பாடு பெருக்கிறது
ஒருகட்டம் வரையும் சுமூகமாய் நடத்துகிறது
மறுகட்டம் அவமானக் கட்டடம் எழுப்புகிறது

கோட்டைகளை இடித்து மண்வீடு செய்கிறது
நிம்மதியைப் புதைத்து நிசப்தத்தை நெய்கிறது
மலராகக் கண்டதை முட்களாய் ஊட்டுகிறது
நிழலாக அண்டியதை நெருப்பாக நீட்டுகிறது

தோப்பை தனிமரமாக்கி அழகு பார்க்கிறது
அழகான உள்ளத்தில் அழுக்கை சேர்க்கிறது
பறவையாய் இருந்தவரை முடமாய் ஆக்குகிறது
எல்லாம் பறித்தபின் சுதந்தரம்தந்து நீங்குகிறது

#ஆணவம்...

_மொ.ப.பார்த்தீபன்...

-


12 JUL 2023 AT 9:21

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதான

ஒருமுகம் கொண்டும் உண்மைகள் கண்டும்
சிறுமைகள் வென்றும் சில்மிசம் கொன்றும்
கவலைகள் வெட்டும் கந்தனில் மட்டும் சரணாகு
இறைக்கரம் பற்றும் பக்தரின் உள்ளம்
கவலையின் வெள்ளம் வென்றிடும் உள்ளம்
புரிந்தவர் நெஞ்சம் என்றெதில் அஞ்சும் நிலையாகும்

மகிழ்வுடன் என்றும் உன்னுடன் ஒன்றும்
நெகிழ்வுடன் சந்தக் கட்டுகள் சிந்தும்
கவிதைகள் கொட்டும் நற்பயன் மட்டும் தருவாயே
இழிவுடன் நிற்கும் இன்னலை விற்கும்
அழிவினைக் கற்கும் கற்பனை அற்கும்
பெரும்பலம் எம்முள் வைத்திடும் உம்முள் வருவோமே

அறுமுகக் கந்தன் சந்தன நந்தன்
பழனியின் மன்னன் பன்னிரு கண்ணன்
வருகிறத் துன்பம் கொன்றதை இன்பம் எனபூப்பான்
திருத்தணிச் செல்வன் வள்ளியின் கள்வன்
தமிழினச் சுப்பன் அன்பதன் அப்பன்
உறவுகள் எட்டும் நம்முடன் ஒட்டும் வழிபூப்பான்

உனைவரும் முன்னர் இவ்வுடல் முண்டம்
தலையெனப் பின்னர் உன்னருள் அண்டம்
தினம்வரும் செல்லும் கண்டமும் கொல்லும் அருள்தானே
கனிமுகம் சொட்டும் நன்னெறி மெட்டும்
இனிப்பிடும் திட்டும் நல்வழிக் கட்டும்
நமதுடன் தங்கும் பக்தியை எங்கும் விதைப்போமே...
_மொ.ப.பார்த்தீபன்...

-


7 JUL 2023 AT 9:27

பேரன்பைப் பொழிந்து பேராறுதல் மொழிந்து
நிழலாய் நிகழ்ந்து உணர்வாய் திகழ்ந்து
இனியவை கூறி தனிமையை வாரி
அழகினை வார்த்து அனுகூலம் சேர்த்து

சுகபோகம் வடித்து சாபகீதம் ஒடித்து
ராகம் பாடி உயிரில் கூடி
நீயே துணை நீயே வினை
என்கிற வேடங்கள் புனைந்த உறவே

அமிலம் போல நஞ்சு போல
உடலை எரிக்கும் உயிரை அரிக்கும்
நம்பிக்கை துரோகம் செய்து விட்டாய்
சாவளவும் வேதனை தந்ததேவுன் சாதனை

உன்னையே நினைத்து உருகிய மெழுகு
தனித்து இனிவான் பறக்கும் கழுகு
ஒரே பிறப்பில் இரண்டு வாழ்க்கை
ஒன்று உனக்காய் இனிமேல் எனக்காய்...
_மொ.ப.பார்த்தீபன்...

-


7 JUL 2023 AT 9:25

மீண்டும்

-


7 JUL 2023 AT 9:24

இயற்கைப் பூவில் துளிர்த்த தேன்
அளக்க முடியாத செழிப்பான வான்
வண்ணம் மாறாத பட்டாம் பூச்சி
இசையை உருவாக்கும் இனிய மூச்சு

ஆதியும் அந்தமும் இல்லாத ஆற்றல்
அறிவை ஊட்டும் நன்னீர் ஊற்று
எளிமை தாங்கி நிற்கும் வன்மை
வலிமை தந்து வாழும் மென்மை

உடலைக் கெடுக்காத வாசனைத் திரவியம்
உயிரைக் கெடுக்காத யோசனை திரட்சியம்
உணர்வுகள் நெருடாமல் வருடும் பூங்காற்று
நுண்ணுணர் தன்மை கூட்டும் தீங்காற்று

வாழ்வியல் சொல்லும் வற்றாத பூமழை
அகவியல் சொல்லும் அன்பான நூல்மழை
தித்திப்பு மாறாத செங்கரும்புச் சாறு
அந்திப்பூ போலே புன்னகை நூறு

நாவோடு மட்டும் நிற்காத பண்பு
நெஞ்சோடு கலந்து உறவாடும் அன்பு
நாரை மணக்க வைக்கும் பூங்கொத்து
நீரை இனிக்கச் செய்யும் தேன்கொத்து

பகைத்தவர் கண்களுக்கு அனல்வீசும் ஒருதீ
இத்தனை பெருமைக்கும் உரியவள் ஒருத்தி
புனைப்பெயர் செல்லப்பெயர் கோடி உண்டு
தமிழென்று பொதுவாய் அழைப்பது உண்டு...
_மொ.ப.பார்த்தீபன்...

-


Fetching நான் நானே Quotes