என் காதல் பூங்காவில் நீ யார்
வாசனையை கொட்டித் தீர்க்கும் மல்லிகையா
பற்றிப் படர்ந்து பரவும் முல்லையா
பாதுகாப்பாய் பார்த்து சிரிக்கும் ரோஜாவா
கள்ளங் கபடம் இல்லாத கனகாம்பரமா
பறிக்கத் தூண்டும் பாசமிகு பவழமல்லியா
அடிவானம் தலையில் சுமந்த செவ்வந்தியா
கோபமும் சாந்தமும் பொதிந்த தாமரையா
இரவை இனிமை செய்யும் அல்லியா
கைலாய மலையின் பனித்தூறலான சம்பங்கியா
சாயந்து பார்க்கும் சந்தன மல்லிகையா
நீலகண்டன் விரும்பும் நச்சான வெள்ளரளியா
ஏக்கமுடன் பார்க்கும் கள்ளிப் பூவா
முள்காயம் மாற்றும் எருக்கம் பூவா
பார்வைக்கு ஆகாத மணக்கும் தாழையா
தொல்லை கூட்டும் கரையோர கைதையா
மருத்துவ குணமான நித்திய கல்யாணியா
திகட்டும் தேனைத் தெளிக்கும் தும்பையா
காப்பாய் திகழும் அன்பு ஆடாதோடையா
என் எண்ணத்திற்கேற்ப நெஞ்சுக்குள் வண்ணம்
குழைத்து கற்பனையில் கவிதை மணமூட்டும்
இனிய அழகிய எழில் மனோரஞ்சிதமே...
_மொ.ப.பார்த்தீபன்...-
எழுதுவதற்காக தோன்றுகிறது...
எனக்கும் வானத்திற்கும் உள்ள தொடர்பு
ஒருதலைக் காதலின் பரிபூரண அருள்
எழுத்துகள் பொதிந்த பெரிய புத்தகத்தில்
எண்ணுவதற்கு ஏற்ப ஏராள பொருள்
பெண்ணின் கண்ணாய் ஒவ்வொரு முறையும்
விண்மீனால் நெஞ்சுக்குள் திக்கு முக்கு
மேகத்தை தடவிச் செல்லும் பறவையாய்
மாறும் போதெல்லாம் சிக்கு புக்கு
காணும் ஏதோவொரு கிரகத்தில் சிறுகோளில்
என்சுயம் மறந்து வசிக்க ஆசை
இதுபோல எதிர்திசையில் இருந்து எவரேனும்
அழைத்தால் எப்படி அறிவதந்த ஓசை
முடிவே இல்லாமல் செல்லும் வானத்தின்
நிறைவில் இருப்பது ஒளியா இருளா
கண்காணும் இடம் சொந்தமெனில் எத்தனை
கோடி நட்சத்திரக் கூட்டம் என்னது
வானம் ஓருயிர் ஆனால் கறுப்பு
வெள்ளை சிவப்பு நீலம் உணர்வா
பார்க்கும் பார்வைக்கு மாறும் மேகம்
எந்த வித்தைக் காரரின் மிச்சம்
என்ன என்ன தோணுதோ பேசென்று
புன்னகை மீன்களுடன் சொல்கிறது பெருவானம்
சோறு வெந்து போதா நீரால்
அடிப்பிடித்த வாசத்தை நுகர்கிறது மனவானம்...
_மொ.ப.பார்த்தீபன்...-
ஒருமுறை ஒரே ஒருமுறை கூட
விதி வெட்டிய புதைக் குழியில்
சிக்கித் திக்காமல் இருந்தது இல்லை
சில குழி விழி தந்த வழி
முள்பிடுங்கும் கருவி உள்ள திண்ணக்கம்
முள்வேலி மீது நடக்கிறது கால்
விடாமல் கொட்டித் தீர்க்கும் மழைத்துளி
தீயள்ளிக் குளிக்க குவளை தேடி கை
தூரத் தெரியும் கற்பனைத் தீவில்
ஆழ அகலத்தில் கிடக்கிறது மனம்
வெடித்துச் சிதறிய கனவுக் கோட்டையின்
கண்ணாடிச் சில்லில் சிரிக்கிறது முகம்
கார் மேகக் கண்ணின் நிலைக்கு
யார் மீது குற்றம் சொல்ல
தேர் சுமந்த முன்னோர் கவியில்
பார்த் தீபன் ஏற்றியது என்ன
வாலிபம் வேக வல்லமை சாக
உள்ளதும் நோக நல்லதும் போக
எல்லாம் கை மீறி மாற
இறுதியில் உறுதி எதுவென்று கூற
ஆசையும் அமைதியும் அழகிய இருகண்
தொலைநோக்குக் கருவியில் இரண்டின் பார்வை
திரும்பவும் முடியாமல் திகழவும் இயலாமல்
ஆடி வாடி எண்ண ஜாடி
இருப்பதும் இறப்பதும் ஒன்றென்று ஆக
அப்போது இத்தேகம் கரைந்து போக
எஞ்சுவது என்ன மிஞ்சுவது என்ன
தத்துவம் எதற்கு வாழும்வரை ஆளு...
_மொ.ப.பார்த்தீபன்...-
உனக்கும் எனக்கும் இடையில் முளைத்தது
கட்டிடத்தில் முளைத்து வளரும் ஆலமரம்
பிடுங்கவோ வெட்டப்படுவோ தான் வேண்டும்
ஆனால் சிரித்த இலைகள் மகிழ்ச்சியே
காகம் எனும் விதி எழுதியதை
காப்பு என்னும் கொல்லி அழிக்கும்
இருக்கும் வரை கட்டிடத்திற்கு ஆறுதலே
இயல்பை மறந்த மண்ணிற்கு தேற்றுதலே
நீடித்த காதலுக்கு ஆசை கொண்டால்
ஏற்ற பொருள் பொலிவிழந்து போகுமே
ஆறுதலுக்கு வந்ததே ஆற்றலைத் தீர்க்குமே
தேற்றுதலுக்கு நின்றதே தீமையை வார்க்குமே
உத்தமம் உள்ளூர உணர்ந்த போதும்
உயிர் வளர்க்க எண்ணுவது நியாயமோ
கிளைகள் வளர்த்தாலும் வேரூன்ற மறுத்து
கானலாய் ஆவதும் ஆலத்தின் கோலமே...
_மொ.ப.பார்த்தீபன்...-
தேன்கூடு கண் கொண்ட கண்மணியே
பார்வை தீண்டும் போதே தித்திக்குதே
ஆரஞ்சு சுளை பூத்த நெய்யுதடே
தூரத்தில் நோக்கும் போதே உயிருகுதே
இலவம் பஞ்சு கன்னம் இழுக்குதே
தொட்டுப் பார்த்தாலே தூக்கம் தோன்றுமோ
பரந்த நெற்றி பரமசிவன் பாதமோ
சரணாகதி அடைய மனம் துடிக்குதே
கூந்தல் புல்வெளித் தோட்டத்தின் சாயலோ
கை மான் மேய மேய அலையுதே
கனிந்த கற்கண்டு காதாய் கனக்குதே
பல்படியக் கடித்து பருகமனம் வளையுதே
மறைந்து கிடக்கும் மர்மம் விலகுமா
கண்டதும் வானமும் பூமியும் இணையுமோ
நெளிந்து சுழிந்து சிரிக்கும் இடையே
என்தலை சாய்ந்து தூங்க வாய்க்குமோ
நீண்டு வளர்ந்த தாமரைக் கையில்
சிக்கி சுழன்று வீழ்ந்தாலும் சுகமே
இறுக்கிப் பிடித்தால் உடையும் கால்களில்
செல்ல உதைபட்டு தவழ்ந்தாலும் சுகமே
கருவான மேக ஆடை கட்டியவளே
மழையாய் பொழிவாய் மயில் தோகையே
பேரன்பின் பெருமை பெயர்ந்த கனிமொழியே
ஓராயிரம் கவிதை உனக்களிப்பேன் உயிர்மொழியே...
_மொ.ப.பார்த்தீபன்...-
இன்றொரு வே(வா)தம்
ஏழ்வர் உண்ணும் இடத்தில்
திறந்தது மூவர் வாய்
சொல்ல நினைத்த ஒன்றை
சோற்றிடையே சொன்னதொரு வாய்
கருத்துக் கணிப்பில் அபார தோல்வி
மூன்றில் இரண்டும் எதிர்ப்பு வேள்வி
கருத்தை பின்வாங்க வைக்க முயற்சி
ஒப்புக் கொள்ளாமல் நின்றது பயிற்சி
கடலை உறிஞ்சும் மேகம் போல
அரைமணி நேரம் நிற்காத விவாதம்
சற்று பொறுத்து சிந்தித்து பார்த்தால்
உண்மையிலது வேறுபல சொன்ன வேதம்
சரிவர உருப்பெறாத ஒருகருப் பிண்டத்தை
சொல்லாமல் இருப்பது நல்லதுக்கு உரியது
முதல் முரண் முளைக்கும் போதே
நிறுத்தாத நிலையில் துன்பம் பெரியது
இரண்டு கருத்து ஒத்தவர்களின் எதிர்ப்பு
மூன்றாவது நபரை அசைத்துப் பார்க்கும்
எந்த எல்லைக்கும் சென்று சேராத
பற்றாத புகைந்த விவாதமும் இருக்கும்
ஒருவேளை இருதரப்பில் ஒருதரப்பு சொந்த
நிலையை விட்டு இருந்தால் மகிழ்ச்சி
ஒற்றை முரணுக்காக ஒட்டுமொத்த உறவையும்
துண்டிக்காமல் மெல்ல நகர்ந்தது நெகிழ்ச்சி...
_மொ.ப.பார்த்தீபன்...-
விளக்கை அணைத்த பின்னர் அங்குமிங்கும்
உலாவித் திரியும் கரப்பான் பூச்சியாய்
நீயுறங்கச் சென்றதும் நானும் அலைகிறேன்
நிம்மதியை கரையானாய் கரைத்தது யாரோ
கடற்கரை ஓரம் கடலலை அடித்து
வந்து துப்பிய ஒருசிப்பி போலே
வாழ்க்கை எனக்கு உன்னை அளித்தது
இரவையும் பகலையும் கலந்தது நீயோ
அழுது ஆர்ப்பாட்டம் செய்த பின்னர்
தாய்மடியில் சொக்கித் தூங்கும் குழந்தையாய்
உன் முகம் கண்டு பூத்து சிரிக்கிறேன்
அழியாத சுவையான நீ மழை நீரோ
சுடும் கடும் வெப்ப காலத்தில்
மானற்ற வனாந்தரத்தில் பற்றிய தீயாய்
உன்னைக் கண்ட நொடியில் எரிகிறேன்
வேகாமல் நோகாமல் மலர்கிறேன் தானே
வானமும் விண்மீனும் பிரியாத போது
நானும் நீயும் உறக்கத்திலும் பிரியலாமோ
காணாத தெய்வம் மகிழ்ச்சியை என்னிடம்
நீயென அனுப்பியது இன்று தானே
வாளை விலக்காத கரிகால சோழனாய்
அற்புத விளக்கை ஏந்திய அலாவுதீனாய்
கவிதைத் தூணை ஏந்திய தமிழாய்
என்றென்றும் சுமப்பேன் இனி நானே...
_மொ.ப.பார்த்தீபன்...-
வாழ்க்கைக் கரையோரம் கழிவுகளை மட்டுமல்ல
ஓவியத்தையும் அழித்தோ அழைத்தோ போகிறது
ஓய்வில்லாத அந்த மறதி அலை...
அறுந்த கயிற்றைத் திரிப்பதாய்
விடுபட்ட சங்கிலியைப் பிணைத்த மனதில்
தண்டவாளத்தில் வெடித்த குண்டாய் பிளவு...-
நிறையாத அணைக்கட்டின் நாலாபுறமும்
பொங்கி பொங்கி வழிகிறது
விவசாயிகளின் கண்ணீர்...
செல்லும் இடம் மறவாதிருக்க
சிறுநீர் கழித்து செல்லும் நாயாய்
கோடு கிழித்து செல்கிறது விமானம்...
புழக்கம் இல்லாத தானியத்தில்
தானியங்கி போலே புத்துணர்வுடன்
பூத்தது தவிட்டு வண்டு...
குளிருக்கு அடுப்படியில் அண்டிய பூனையால்
விடிய விடிய வயிற்றில் புளிக்கரைசலுடன்
புளி தின்ன வந்த எலி...
கோடிட்ட இடங்களை நிரப்பாத
மாணவருக்கு நன்றி சொன்னது
மூச்சு முட்டிய நகர எழுத்துகள்...
_மொ.ப.பார்த்தீபன்...-