தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன தனதான
நொறுங்கிய நெஞ்சம் வழங்கும் உன்னிடம்
அடிபணிந் திட்டும் வெறுப்பு என்னிடம்
தருகிற தெய்வம் கடம்பன் என்பது சரிதானா
இதுவரை உள்ளம் புசித்த துன்பமும்
எதுவரை இன்னும் தொடர்ந்து என்னுடல்
அழிக்கிற உச்சத் திறத்தைப் பெற்றிடும் பெருமானே
கவலைகள் மட்டும் எனக்கு என்னிழல்
நிலையென முன்பின் படர்ந்து வந்திட
இருந்துமென் பக்தித் துளிர்த்துக் கொள்வது புதிர்தானே
மடமைகள் செய்யும் மனத்தில் அற்புத
கடமைகள் சொல்லித் திரிந்த கந்தனை
உடமைகள் என்றும் கழற்றி விட்டது பிழைதானே
அறுமுக அப்பன் உணர்வை வென்றதும்
சிறுமுகம் பண்ணும் தவற்றைக் கொன்றதும்
பழையது என்னும் நினைப்பு நின்றிட துணைவாநீ
உடன்வரும் பிம்பம் மறக்க செய்தொழில்
மறந்தவர் கொள்ளும் இழுக்கை நித்தமும்
உயிருடல் பெற்றுத் தவித்து நிற்பது இனிவேண்டாம்
உனைவிட இன்பம் இறந்து விட்டது
உறைவிடம் எங்கும் மறைந்து சுட்டது
அமைதியின் வெப்பம் தணிந்து கெட்டது பகவானே
அழுதிடும் கண்கள் கனிந்து நிற்குது
தொழுதிடும் செய்கைத் தளிர்த்து நிற்குது
எழுதிடும் சொல்லுன் புகழ்கள் விற்குது சுகமாக்கேன்...
_செ.ப.பார்த்தீபன்...
-