என் அன்பெனும்
நீர் பாய்ச்சலில்
இவள் பாத்திக்கு
மட்டும் கூடுதல் நீர் ❤️-
முனையும் ஓர் சிறு வினைஞன்.
ரயில் பயணம் ! வழக்கம் போல் நெரிசல் .
ரயிலிக்கே உண்டான ஒரு வாசம்.
துண்டுகளும் கைக்குட்டைகளும் இடம்பிடித்துக் கொண்டிருந்தன.
ஜன்னல் வழி ரிசர்வேஷன்களாக
இறங்கியவர்களை இறங்கவிடாமல் இடைமறித்து
இன்னல்களீந்து இடம்பிடித்த இனிய பயணிகள் ?
ஒரு வழியாக மேலே,கீழே என்று தனக்கும் தன்னுடமைக்கும் இடமமைத்து அமர்ந்து பயணத்திற்கு முந்திய அந்தப் பயணத்தில், பல சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரப் பயணம்..
பிஸ்கட்,கடலைமிட்டாய் ,தண்ணீர் பாட்டில்,சமோசா,சாப்பாடு, கீ செயின் ,பர்ஸ், திருநங்கை அக்காக்கள் என்று பலர் கடந்தும் நடந்தும் சென்ற வண்ணம் இருந்தனர்.
அவர்களுள் ஒருவராக பாப் கார்ன், பாப் கார்ன் என்று உரக்க கத்திய வண்ணம் ஒருவர். கர்சீப் கர்சீப் என்று ஒரு அண்ணா.
சிலதை விற்று அவர் கடந்த பின்னும் சிறிது நேரம் எதிரொலியாக பெட்டிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது அவரொலிகள்
கர்சீப் அண்ணா திடீரென "பாப் கார்ன் பாப் கார்ன்" என மாற்று விற்பனை செய்ய நெரிசல் பெட்டியில் ஓர் புன்சிரிப்பு
அவரும் நிலைமையுணர்ந்து ஐயையோ "கர்சீப்" என்றதும் சிரித்துக்கொண்டே வாங்க நினையாத என்னைப்போல் சிலரையும் கூடுதல் கர்சீப் வாங்க வைத்தது அந்த நிகழ்வு-
நல்லை அல்லை சகி
சொல்லை அழகாக்கிவிட்டு
இல்லை என்கிறாள் -
முல்லை எனப் புவியில் பூத்துவிட்டு
ஏனைய பூக்களுக்கு தொல்லை ஆகிறாள்
அழகென்ற சொல்லை
அழகாக்கிவிட்டு அழகில்லை என்கிறாள்.
காதல் வில்லை நாணேற்றி
விட்டு நான் இல்லை என்கிறாள்.
அன்பின் எல்லை எதுவெனக்
காட்டிவிட்டு அது நானன்று
என்று நாணுகிறாள் - என் மனக்
கல்லை பேரன்பின் சிற்பமாக்கி
விட்டு நான் இல்லை என்கிறாள்.
இல்லை இல்லை என்று
சொல்வதில்தான் நீ
முழுவதுமாய் இருக்கிறாய் சகி
-
சொற்கள் அழகென்கிறாள்!
சொற்களே இவளால் தான்
அழகாகிறது என்பது அறியாமல் !-
பிடித்து எழுதுகிறேனோ
இல்லை
எழுதப் பிடிக்கிறதோ
எதுவாயினும்
இவளுக்காய் எழுதுவது
என்பதே
பேரானந்தம்-
அவள்
கவிதையா
காவியமா
உரைநடையா
செய்யுளா
இலக்கணமா
இலக்கியமா
ஹைக்கூவா
நாடகமா
சிறுகதையா
புதினமா
இல்லை
இவையேதும்
இல்லாத
புரியாத புதிரா!-
சொட்டுந் தேனே
கொட்டும் மழையே
கொஞ்சும் மொழியே
மிஞ்சும் அன்பே
தீராத அமிர்தமே
மாறாத பாசமே
வீசும் தென்றலே
கூசும் வருடலே
தீண்டும் உயிரே - என்றும்
வேண்டும் இவளே!
-
என் எழுத்து இலக்கிய தரம்
வாய்ந்ததா என்றெல்லாம்
தெரியவில்லை
எழுத்து வழி என் கருத்தைக்
கடத்த முயல்கிறேன்
என் ஒரு சொல், ஒரு வார்த்தை
ஒருவரிடம் ஒரு சிறு
மாற்றத்தை ஏற்படுத்தி விட்டால்
என் முயற்சி வெற்றி என்பேன்-