இங்கே கட்டமைக்கப்பட்ட யாவும் பொதுமைப் படுத்தப்படும்போது நீளும் விரல்கள் எப்படி சுருக்கிக் கொள்வது? உங்கள் வசவுகளுக்கு எட்டாத காதுகள் உயரங்களை நோக்கி திறந்தே இருக்கும் ....
முழு நேரத்தையும் அவனோடு கடத்திக் கொள்ள வேண்டும் உங்கள் சொல்லகராதியில் எதையும் எழுதிக் கொள்ளுங்கள். உங்கள் வரையறைக்குள் அகப்படாது பறவைகள் போல் நாங்கள் இருக்கவே விரும்புகிறோம்
எனை தீர்க்க வல்ல வார்த்தைகளில் ஒத்தடமிடுவாய் வலிந்து பற்றும் இலையுதிர்காலம் எங்கும் வெயில் புழங்கும் .. எனினும் என்ன நிழல் விழும் இடமெங்கும் முத்தமிடும் உன் நினைவுகளின் அற்புதம்
இருள் விலக நீ பிறப்பெடுத்த நீண்ட பகல் நாளிது... தனித்தே ஒலி கேட்டு பழகிய செவிகளுக்கு உயிர் மீட்டியவளே.. வெண்முகில் தீண்டும் பன்னீர் பூக்கள் உன் புன்னகை... ஒளிரும் நீரூற்றுகள் கண்கள் நாவல் பழமென அதரங்கள் உரச பிடிக்கும் கூழாங்கற்கள் கன்னங்கள்.... சதிரே... கற்பிதங்கள் தாண்டிய நிஜமொன்றில் நிலைபெறு... வாழ்வின் அற்புதங்கள் உனதாகும்... வாழ்த்துக்கள் மகளே
நிஜத்தில் உன்னிடம் பேசாமல் இருப்பது அவ்வளவு லகுவானதில்லை.. நெடிய போராட்டம் தாண்டியும் உயிர் வாழும் வித்தை கற்றுத் தருகிறாய்.. இன்னமும் தா... நம் மகிழ்வான நாட்களின் நினைவுகள் சூழ தனிமை சூடிக் கொள்கிறேன்
எதன் மீதாவது உமிழ்ந்து விட வேண்டும். கசப்பேறிய மனமெங்கும் இழைந்தோடும் அன்பின் பிரியங்களை.. மிச்சமிருக்கும் நாட்களில் முகமுகமாய் பார்க்கும் போது எதன் பொருட்டும் மன்றாடாமல்...
எதில் புதைத்து கொண்டாலும் எட்டிப் பார்க்கும் உன் தலைமயிரில் கைவிரித்து கொள்ளும் காதலை மிக நேர்த்தியாக அசைவற்ற உன் மௌனங்களால் கையகப்படுத்திக் கொள்கிறாய்...