உன் இசைவின்றி
தானாகவே எதுவும் நடக்காது
உன் விசையின்றி
தன்னாலே எதுவும் சரியாகாது ..-
கவிதை ...
வார்த்தைகளின் ஜாலங்களில்
மாயங்கள் செய்யும் கவிதை
இரு மாயாஜாலம்..-
இசையோடு நீயும்
உன்னோடு நானும்
மழையோடு மண்ணும்
குளிரோடு காற்றும்
கரைய கரைய
காலம் நீள்கிறதே ....-
செல்லும் உணர்வுகள்
நிஜம் என்னும் வெளிச்சத்தை
உணர்வது எப்போது .....
- ஜீவன்மொழி-
உன் விருப்பப்படி என்றவுடன்
உறவின் பிடியில்
சுதந்திரம் சரணடைகிறது.
நாம் என்பதிலிருந்து
நான் பிரிந்து செல்கிறது.
- ஜீவன்மொழி-
அலை அலையாய் மேகம்
அள்ளி அள்ளி தெளிக்க
துளித் துளியான மழையில்
துள்ளிக் குதிக்கும் மனம்..-
எதிர்பார்த்து காத்திருந்த
களைப்பில்லா பயணங்கள்
களிப்புமிக்க பகிர்வுகள்
உறவுகளின் உபசரிப்புகள்
உற்றாரின் அருகாமை என
உச்சம் தொட்ட உவகை
விரும்பிய விருந்தோம்பல்
விடைபெறா தருணங்கள்
குறைவில்லா சந்திப்புகள்
குதூகலக் கொண்டாட்டங்கள்
என நாட்கள் கரைந்ததே
தெரியாமல் உருண்டோடிய
விடுமுறைக் கால்தடங்கள் !
இவை காத்திருப்பின் வலி தீர்க்கும்
அன்பு அத்தியாயங்கள் !
வாழ்க்கை பயணத்தின்
இன்றியமையாத பக்கங்கள் !
சலிக்காமல் அனுபவித்து
சிறுக சிறுக சேகரித்த
நினைவுப் பெட்டகங்கள் !
மீண்டுமொரு நீண்ட
இடைவெளிக்கு தேவையான உந்துவிசை !
- விடுமுறை முடிந்து திரும்பும்
மண்மனம் மாறா வெளிநாட்டு வாசிகள்
- ஜீவி-