தனிமைத் தீ எனை எரிக்க முயன்றபோது
மனங்கொண்ட வெப்பத்தை
தணித்துக் கரைத்தன என் அன்புப் புத்தகங்கள்..!
நானே அறியாமல் என் நாளின்
பெரும்பகுதியை மென்று தின்றன..!
என் இராட்சதப் புத்தகங்கள்..!
அதீத கண்ணீர்..அதீத வலி..
அதீத இன்பம்..அதீத ஆசை..
அதீத காதல்..அதீத கோபம்..என
அதீதங்களை அறிமுகம்
செய்தன என் பிரியப் புத்தகங்கள்..!
தனிமை கொடு என்று கோபம் கொண்ட நிமிடங்களில்
மடியில் அமர்ந்து செல்லம் கொஞ்சின..!
சுகமான சுமைகளாய் கைகள்
சேர்ந்தன..என் செல்லப் புத்தகங்கள்..!
கிறுக்கல்..கொஞ்சல்..புன்னகை..
கண்ணீர்..கோபம்...சிணுங்கல்..
காதல்..தேடல்.. தீண்டல்.. முத்தம் என என் அத்தனைக்கும்
உரிமை கொண்டாடின
என் நேசப் புத்தகங்கள்..!
உடனிருத்தல் பெருங்காதல் எனில்
என் புத்தகங்களின் மொத்தக்காதலும் எனக்கு மட்டுமே...!
-