நிலவுக்கு துணையாயிரு..
சூழும் இருளில்
சுகமான இசை பாடும்
மூங்கிலினில் இவள்
ஒளிந்து கொண்டாள்!!-
இப்படியே இரு..
எதைத் தேடியாவது
வருடும் காற்றில்
மிஞ்சிய நிலவில்
மீதமான நினைவுகள் சுமந்து
கடக்காமல்
கடந்துவிட முயல்கிறேன்!!-
சொற்களின் அபிநயம் அவன் சூட்டிய
பூவுக்குள் மட்டும் ஏனோ ...
நாணத்தின் சிவப்பு
இமை கவிழ்ந்து இதழ் மலரும்
விரல்களின் மறைவில்
முகம் சிவக்கும்!!
-
ஆடித் திரையிட்டு
ஆவல் ஒளிந்திருக்கும்
அட!!
என்றொரு எதுவும்
எதிர்படாது பிறர் விழியில்!!-
விழி தெறித்த பார்வை பட்டு
இமை கவிழ்த்தது இவன் விழி
பாதயிதழ் கீர்த்தன மிசைக்கையில்
பார்வை மொழி பாதத்தில்
இது பரதமோ
அன்பின் பதமோ யென
பார்வையில் பாடம் படிக்கும்
ஈரிரெண்டு விழிகள்!!
-
தனக்கான முகவரி
முக வரிக்குள் வரையாது
அஞ்சுவதறியாத அகத்தில்
அடையாளமிட்டு
தனை மீட்டு
தன்னுள் தன்னை
மதித்தலே இறையாண்மை!!-
என்றும் விடுப்பு
நம்மில் கூடாது
இருள் தீரும் வரை
சொற்களை தீர்த்துவிட்டு
மௌனத்தில் கரை(வோ)ப்போம்!!
-
காற்றுக்கும் காது கேட்குமென
கேட்டு வைக்கிறேன்
இரகசியமாக இட்டுச் செல்வாயா
மலரின் விரல் பிடித்தது போல..
மெல்ல அணைத்து
இமையிதழ் மயங்கவிட்டது போதும்
என்னுடன் கலந்துறவாட முனைவாயா
வாடித் தீரும் முன்
வாசத்துடன் இருக்கையிலே
வந்திணைவாயா
வழித்துணை இவளிணை
காற்றே கொஞ்சம் கேளேன்!
-
இத்தனை மணித்தியாலம்
கடந்தும்..
ஏதோவொன்று உருளுவது
அறிந்திருந்தாயா நீ
சொற்களை கடந்தவொரு
உணர்வினை அறிவாயா
முதலிரு சொற்களை உதிர்த்திடு
தொண்டக்குழி தாளாமல்
திக்கித் தவிப்ப தறிவாயா!!
-
பெண்ணை தெய்வமென்றாய்
அடுப்படியில் பேயாக்கிய பின்
முள்ளாகிக் குத்தும்
படுக்கையின் ஓரம்
ஒதுங்கிய உறக்கத்தில்
ஓராயிரம் கனவுகள்
ஓரடி முன்வைக்கும் பாதையில்
ஈரடிதனை மறைக்கும்
இறக்கி வைத்தும் அகலாத பெருவயிற்றுப் புதையல்!!
-