வெளிறிய முகில்களுக்கு வண்ணம் தீட்டி
காதல் வரைகிறேன் என்கிறாய்
பழுப்பேறிய தாள்களுக்குள்
கவிழ்ந்துகொண்டு
கதிமோட்சம் பெறுகிறவளைப் பார்த்து!-
அதனின் அதனின் இலன்
சுண்டிவிடப்படும் நாணயங்கள் அனைத்தும்
காலத்தின் சுருக்குப்பையில்
பத்திரப்படுத்தப்பட்டன
துணைவரும் உந்தன் குரலின்
அடையாளம் தேடித் தேடி
எந்தன் தொலைதூர பயணங்கள்
சோர்ந்து போகின்றன
மூடிடும் விழிகளை நனைத்து
வெளியேறும் துளிகளை
மோதி வருடிச் செல்லும் காற்றுக்கு
மாற்றாய் தந்திட என்னிடம்
இம்மியளவு மிஞ்சிய காதலைத் தவிர
எதுவும் இல்லை!-
பெரும்பள்ளங்களை தேடி விரையும்
மேகங்களைப்போல
இந்த காதல் என்கிறார்கள்
மணலும் மலையும் என்ன பாவம் செய்ததாம்?!-
படுத்தியெடுக்கும்
தலைவலி
பாதங்களின்
ஓயாத உழச்சல்
சிடுசிடு மனநிலை
இப்படியென
பல நாட்கள் கழித்து
உன்னை நினைத்துக்
கொள்கிறேன்
சின்னச் சின்ன
அன்பளிப்புகளில்
பொங்கி நுரைக்கும்
ஆச்சரியங்களாய்
பூரித்து விழிகள்
விரியும்முன்னே
கோடாலித் தைலத்தோடு
வி(மு)டிந்து விடுகிறது
எந்தன் இரவு!-
கரை தொடும் அலைகளுக்கும்
நிதம் சுடும் நினைவுகளைத்
தணிக்க வழியில்லை
நனைக்க மறுக்கும் கால்களை விடுத்து
மனம் மொய்க்கும் முத்தங்களை
காற்றில் வீசிச் செல்கின்றன
காயமாற்றும் அலைகள்
நேரமெடுத்து உண(ல)ர்ந்த ஈரங்களில்
கொஞ்சம் உவர்ப்பு சுவைகூட!-
காலம் அத்தனையும்
பறித்துக் கொண்டது
மிஞ்சியிருக்கின்றன நுரைகளாய்
நினைவுகள் மட்டும்...
எழுத முடியாமலே போய்விடுமோ?
நேரமெடுத்து விழுங்கும் அழுகைகளில்
வெளிறிப் போகும் வார்த்தைகளை...
பழகிய கடற்கரை இல்லை
அதனாலென்ன ..?
இங்கேயும் அலைகள் உண்டுதானே!-
உலர்ந்த நத்தையின் கூட்டில்
நமக்கென ஒரு வாழ்வை
சமைத்துக் கொள்வோமா?
உருகிய மெழுகின் பிசுபிசுப்பாய்
நமக்கென ஒரு காதலை
செதுக்கிக் கொள்வோமா?
தனித்துவிடப்பட்ட இருட்டில்
கவனமாக கோர்த்து உனக்காகவே
அச்சிலேற்றப்பட்ட சொற்கள் இவை..
மற்றவர்கள் கவிதைகளென பெயரிட
நீ இருந்திருந்தால் புனைகதைகளென
அடையாளப்படுத்திக் கொள்வாய்..
அதனாலென்ன..?
நீரூறும் நிலத்தின் அடையாளம் மட்டுமே
தேடிதானா பெய்கிறது மழை!-
நீரின்மேல் அடுக்கப்பட்ட
அஸ்திவார கணக்காய்
விடைபெறுதலுக்குக் கூட
தகுதியிழந்துபோனதொரு
அன்பைச் சுமந்துதான்
சிறுத்துக்கொண்டே வரும் வீதிகளில்
வாழ்வின் பாதியை
கடந்திருக்கிறேன்.....-
இருப்பின் நிமித்தங்கள் அத்தனையிலும்
நீயே நிரம்பி வழிகிறாய்
வாழ்வின் குறைகள் அத்தனையிலும்
நீயே வரைவுகளாகிறாய்
அதீதங்களின் கிரீடமாய்
அகலாதொரு மயக்கத்தின் வரைபடமாய்
அணிந்திருக்கும் இந்த கர்வத்தின் பின்னே
உன் விரல்களின் கதகதப்பினை
தேடியலைந்தபடி
என் ஆன்மாவின் நிழல்...
நெளியும் நிழல்களில் நெடிந்துயர்ந்த
இவளின் இரவுகளும்!-
பிறகு பேசலாம்..
அன்றாடங்களின் போர்வையில் தினமும்
விரைந்திடும் மணித்துளிகள்
உறைந்து நிற்கும் கணத்தில்
ஓராயிரம் முறை
நேசங்களை பகிர்ந்து கொள்ளலாம்
இந்த உலகம் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றில்லை
காய்ச்சலின் தளர்ச்சியாய்
கவிதைப் பட்டறையில் முகவரியிழந்துபோன
அதிகார படிமங்கள்...
இயந்திரச் சலனங்களாய்
இரக்கமற்று முகமற்றுபோன
இந்த கவிதைகளின் மீது
காலூன்றியபடி ஒற்றைக் கொக்கு
பிறகு பேசலாம்...
பிசகு என்ற பின்?-