வாசனை திரவியங்கள் கூட
பழைய நினைவுகளின் வாசலுக்கு
திறவுகோலாய் மாறுகின்றன.
என்றோ எழுதிய கடிதங்கள் கூட
மறந்த கதைகளை மெய்யாக்குகின்றன..-
கவிதை நூல்களை
வாசிப்பது என்பது
சில நேரங்களில்,
அடுத்தவரின் கண்ணாடியை
வாங்கி அவரின் உலகத்தை
வேடிக்கை பார்ப்பது போன்றது.-
அறையை பூட்டவில்லையா?
யாராவது திருடிவிடப் போகிறார்கள்
என்றான் நண்பன்;
திருடுவதற்கு என்ன
இருந்து விடப்போகிறது
அடுக்கி இருக்கும்
தூசி படிந்த புத்தகங்களை தவிர...-
வானில் கோடி நட்சத்திரங்கள்
உன்னை பார்த்து கண்ணடிப்பதில்லையா ?
நீ செல்லும் இடமெல்லாம்,
தினம் நிலவு உனை பின்தொடரவில்லையா?
நீ வரப்போறம் நடந்து சென்றால்
உன் பாதங்கள் பார்க்க
நெற்கதிர்கள் தலை சாய்ப்பதில்லையா?
உன் மேனியில் முத்தமிட
மழைத்துளிகள் தரையை தொடுவதில்லையா ?
காற்று வீசுகிற சாக்கில்,
உன் கூந்தலை மெல்ல வருடுவதில்லையா ?
அதுபோலத்தான் நானும்!!!-
அந்தி சாய்ந்து
இருள் சூழ்ந்து
இரவு கதவை தட்டும் போது
விளக்கை
ஏற்றத்தான் வேண்டும்
ஆனால், நீயில்லாத
வீட்டில் எங்கு போய்
தேடுவேன் ஒளியை?!-
கவிதைகள் வாசிக்க
சிலாகித்து ரசித்து, பின்
கண்கள் விரிந்து
புத்தகம் பரிந்துரைக்கும்
தோழிகளை யாருக்குதான்
பிடிக்காமல் போகும்..?-
சிறிய கண்ணாடி குடுவைக்குள்
சுற்றித்திரியும் மீன்களைப் போல்
உறவின் கடலில் இருந்து
பிரிந்து வாழ்கின்றன
தனிக் குடும்பங்கள்..!-
காதல் எனும் நூலில்
நான் திரும்பத் திரும்ப
அடிகோடிட்டு வாசித்து ரசித்த
கவிதைகள் நீ...-
சன்னல் அருகே நிலவொளியில் வைத்த
புத்தகத்தை வேகமாக புரட்டி வாசித்து
கொண்டிருந்தது காற்று!-