அகிலத்தில் நம்பிடும் தோழமையும் அவள்தான்
ஆனந்தம் தந்திடும் பகைமையும் அவள்தான்
அன்பினில் சாய்த்திடும் இனிமையும் அவள்தான்
அனகோண்டாவாய் சீறிடும் வன்மையும் அவள்தான்
இரண்டாம் மூளையாகிய திறமையும் அவள்தான்
ஈடு இணையாகிய பெருமையும் அவள்தான்
ஈன்றவர் இல்லதுக்குப் பாடலும் அவள்தான்
இன்றுவரை எனக்குக் காவலும் அவள்தான்
அக்கா என்றழைக்கும் தாயும் அவள்தான்
அன்றைக்கும் என்றைக்கும் என் சேயும் அவள்தான்
சீர் பெற்று வாழ்வாய் சாதித்திந்த மண்ணில்
பார்போற்ற உயர்வாய் தமக்கைஎந்தன் கண்ணில்-
பலர்கேட்க உரைத்தல் வரம்..
வெண்பட்டு கலைவாணி
வீணவச்ச கண்மணி
விடியல் தரும் வித்யாரூபிணி
சகலகலா ராகினி
சாஸ்த்திர தாரணி
சரஸ்வதி மகாராணி
எனக்கு தமிழூட்டிய கோவே
நின் தாள் பணிந்தேன் தாயே 🙏-
பெற்றெடுத்து பெயரும் வைத்து
பெரியதொரு வாழ்வும் கொடுத்து
பற்றி கொள்ளும் கரங்களாய்
பாரில் சுற்றும் பெற்றோருக்குத்
திருமணத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
புள்ளைக்காக புண்ணியம் சேர்க்கும் பூமியில்
புண்ணியம் சேர்க்கிறேன் நானும்
பூ போல் பெற்றவர் புன்னகை நிலைக்க 🙏-
அ-ன்பின் வழிநடக்க என்தாய் கரங்கள்
ஆ-சையாய் முத்தமிட நாங்களிரண்டு மகள்கள்
இ-சையைப் போன்ற இனிமையான நாட்கள்
ஈ-கை பெருக்க ஈடில்லா தனங்கள்
உ-டுக்க தகுந்த உயர்ந்த ஆடைகள்
ஊ-னுயிர் காக்கும் உன்னத உணவுகள்
எ-ண்ணம் எல்லாம் இன்பச் சுவடுகள்
ஏ-றிமகிழ கல்வியின் மேடைகள்
ஐ-யமில்லா உண்மை உறவுகள்
ஒ-ருவழி நடக்கும் நேர்மை பண்புகள்
ஓ-ங்கி நிற்கும் ஆசிரியப் பணிகள்
ஔ-வை தமிழ்போல் நீங்காப் பெரும்புகழ்
வாழ்வெல்லாம் கிடைத்திட வேண்டுதல்கள்
வரமாய் கிடைத்தத் தந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இயற்கையும் இறைவனும் ஒருவரம் கொடுத்துவிடுங்கள்
எந்தன் புண்ணியம் எடுத்தேனும் எந்தை முகம் சிரிக்கவையுங்கள்-
கருப்புதோலு கண்ணாடிக்காரு
கருணையுள்ள மனசுக்காரு
பெரியகோட்ட பிறந்தவரு
பிரியமுள்ள பேச்சுக்காரு
மூணுபேரில் மூத்தவரு
முத்தலைமுறை பாத்தவரு
வைரத்துக்கு வீட்டுக்காரு
வைராக்கியத்தில் கெட்டிக்காரு
நாலுபுள்ள பெத்தவரு
நாணயமுள்ள செட்டியாரு
மக்கமூணும் முன்ன கொஞ்சுவாரு
மகனமட்டும் பின்ன மெச்சுவாரு
மல்லுகட்ட பிடிக்காதவரு
மண்டியிடாத பிடிவாதக்காரு
உலகங் கடந்து போயிட்டீங்க
உள்ளத்துக்குள் மறையலயே
உயிரத் துறந்து போயிட்டீங்க
உறவு இன்னும் குறையலயே
ஐயா சொன்ன அம்மாடா
அகிலத்தில் சொல்ல ஆளில்லையே
பேறுவீடு அடஞ்சுட்டீங்க
பேத்தி இவ மறக்கலயே
பெரியவர் ஐயா புகழைப் பாட - என்
பேனா மையி பத்தலயே!!-
திக்கெட்டும் திரண்டுவரும் தீராத குழப்பங்களுக்குத்
தீர்வும் - இவரே
கொட்டட்டும் முரசமென நான் கொண்டாடும்
குருவும் - இவரே
எட்டெட்டும் பதினாறும் எல்லாப்புகழும் எனக்களித்த
எஜமான் - இவரே
தென்னாட்டு வீரம்கொண்டும் தேன்போல இனித்திடும்
குணவான் - இவரே
மார்மீது சீராட்டி மதிதந்து பாராட்டிய
தந்தை - இவரே
மகள்களுக்கு ஒன்றென்றால் மதிலாகி மார்புடைக்கும்
விந்தை - இவரே
இவரன்றி இயங்க தெரியாத மகள் இவளின்
தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா😘-
உலகம் நான்காண உள்ளே சுமந்தவள்
உணவாய் நான்உண்ண உதிரம் தந்தவள்
உயர்வாய் நான்வளர உழைத்தே தேய்ந்தவள்
ஊரார் மெச்சிடும் உத்தமி அவள்
மார்புதைக்கும் துரோகங்களுக்கும் மனங்கொண்டு
மன்னிப்பளிப்பேன்
எனையீன்ற
மாதாவைப் பழி்சொன்னால் தழல்கொண்டு
உயிர் எரிப்பேன்
-
அன்பில் சற்றும் குறையாமல்
ஆசைகளனைத்தும் நினைக்காமல்
இளம்வெயிலும் என்னைத் தீண்டாமல்
ஈயெறும்பு மக்களுடலை அண்டாமல்
உன்னுடல் ஆரோக்கியம் பேணாமல்
ஊர்கண்கள் என்மீது படாமல்
என்றும் என்னை நீங்காமல்
ஏளனங்கள் பொறுக்காமல்
ஐவிரல் பிடியினை விடாமல்
ஒழுங்காய் ஒருவேளையும் உண்ணாமல்
ஓடிஓடி ஓரிடத்தில் உறங்காமல்
ஔடதம் ஏதும் தவறாமல்
ஈரைந்தோடு நிற்காமல்
இன்றும் எங்களைத் தாங்கிடும் தேவதைக்கு
அன்னையர் தின வாழ்த்துகள்😘-
கசப்பான காலையாய் அமைந்தாலும்
மந்தமான மதியமாய் இருந்தாலும்
மனசோர்வாய் மாலைகளைக் கடந்தாலும்
இரவில் இல்லத்தில் இன்பமாய் நுழைகிறாள்
அம்மா என்றோடிவரும் மகளையும்
அன்பே என்றழைக்கும் கணவனையும்
அள்ளி அணைத்துக்கொள்ள
அலுவலகம் செல்லும் அன்ன(னை)மவள்…!-
உரையாடல்கள் இன்றும் இனிக்கின்றன
உலறல்கள் இன்றும் கேட்கின்றன
உன் நினைவுகள் இன்றும் கனக்கின்றன
உன் அறிவுரைகள் இன்றும் நிலைக்கின்றன
உயரம் தொடும்போதெல்லாம் உள்ளம் எண்ணுகிறது
ஊர் கொன்ற கோரனாவையே வென்ற கிழவன்
இன்னும் சிலநாள்
உயிரோடு இருந்திருக்கலாம் என்று..!
-