யாதுமாகி...
இன்னும் எதனிலெல்லாம் பொதிந்திருக்கிறாய் நீ?
பிடித்த பாடல் வரிகளினாலான எனக்கே எனக்கான என் உலகில் உன் முகம் மட்டுமே.
நான் ஆசையாய் எடுத்துடுத்தும் கிளிப்பச்சைச் சட்டையில் உன் வாசம்.
வானுயர விரிந்திருக்கும் மரத்தினிருந்து உதிரும் மஞ்சற் பூவிலும் உன் புன்னகையின் இதம்.
அந்திவான்முழுதும் படரும் இளஞ்சிவப்போ உன்னை நினைக்கையில் நான்கொள்ளும் வெட்கத்தையே நினைவூட்டுகிறது.
நெடுநாட்களாகத் திறக்காத புத்தகத்தின் ஈரநெடி நாம் சேர்ந்து வாசித்த உன் கவிதை வரிகளையே நினைவுகூருகிறது.
இப்படி என் சின்னஞ்சிறு உலகின் பேரதிசயமாய்ப் போய்விட்டாய் நீ.
நீ இல்லாததோர் உலகை இனி இப்பால்வீதியில் எங்கு தேடி அலைந்துகெடுவேன்?-
இன்றும் அந்தி சாயுங்காலம் எட்டிப் பார்க்கிறது அதே வெண்ணிலவு;
இதழ்விரியக் காத்திருக்கும் மொட்டுக்களையெல்லாம் ஒருகணம் தொட்டுப்பார்க்கிறது;
இணைசேரக் காத்திருக்கும் இதயங்களுக்கு இன்னுயிர் ஊட்டுவிக்கிறது;
உறங்கச் செல்லும் இந்த மாநகருக்குப் புதுவண்ணம் பூசிச்செல்கிறது;
பகலொளியில் பதுங்கிய உணர்வுகளைத் தட்டியெழுப்புகிறது;
உறங்கவியலா உயிர்களுக்கு உற்ற கதை கூறுகிறது - அவர்கள் கதைகளுக்கு செவிமடுக்கிறது;
தன்னகம் தேய்ந்திடினும் தண்ணொளியால் மண்ணகம் நிறைக்கிறது;
இருளில் தொலையும் மாந்தர் நமக்கு பிறைநிலவன்றி வேறுதுணை ஏது?-
என்னிடம் பொட்டு வான் உள்ளது;
அதில் சிறிது வண்ணம் தெளித்து, ஓரிரு மீன்கள் பதித்துத் தருவாயா?
அன்பின் அடையாளமாய்ப் பிறைத்திரள் கொடுத்திடுவேன்;
தரைதொடும் உன் ஈரப்பின்னலில் சூடிக் கொள்வாயா?-
ஏன் இப்படிக் கனக்கிறது இன்றைய மாலைப்பொழுது?
கார்காலக் கவிதைகளைப் படித்துக்கொண்டே காற்றில் கரைந்து போய் விடவேண்டும்;
கவிக்குக் கனமிழக்காத நெஞ்சம்தான் உண்டா?
-
இதே மழை அந்த ஜன்னலுக்கு வெளியிலும் பெய்து கொண்டிருக்கும் அல்லவா?
இதே பாடல் அந்தத் தெருமுனையிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் அல்லவா?
இதே குளிர் அந்த அறை முழுதிலும் பரவியிருக்கும் அல்லவா?
இதே இதம் அந்த இதயத்திற்கும் தேவைப்பட்டிருக்கும் அல்லவா?-
நினைவுகளை மீட்டெடுத்து
அவைக்கொரு உருவம் கொடுப்போமா?
என் வியர்வைக் குளுமையில் நீயும்
உன் சுவாசச் சூட்டில் நானும்
மெய்மறந்து சொக்கியிருந்தோமே?
அந்நொடிகளை எவ்விடத்தில் வைப்போம்?
பதினேழாம் இராகமாகிய உன் குரலை,
என் காதுருகே மட்டும் கேட்குமுன் ஒலியை,
அவ்வுருவுக்குள் புகுத்தி இசையெழுப்பிப் பார்ப்போமா?
-
மழையோடு விடியும் காலையில்
மாடப்புறா என்ன செய்துகொண்டிருக்கும்?
இரை தேடக் காத்திருக்குமா? - இல்லை
உன் கன்னக்குழியில் தேங்கும் மழைநீரை
மடுவென நினைத்துப் பருகப் பார்த்திருக்குமா?-
உன் விழிபட்டுத் தெறித்துவிழும் ஒளிச்சாரலைக் கோப்பையில் சேமித்துக் கொள்கிறேன்;
பொலிவிழந்த என் நிலாக்கள் வேண்டியமட்டும் பருகிக்கொள்ளட்டும்!
இன்னும் எத்தனை பிரகாசங்களை விழியோரம் பதுக்கி வைத்துள்ளாய்?-
கங்குல் வெள்ளத்தில் ஒளிர்விடும் நுண்மணியே!
கதிர்த்துகளும் உனைத் தொட்டவிடம் சிதறும் மாயமென்ன?
நீ தளராது மிளிர பிரபஞ்ச ஒளிமுச்சூட்டையும் ஓரிடத்தில் குவித்து வைக்கவா?-
மண்குளிரப் பெய்யும் மழை,
வானின் வியர்வையா கண்ணீரா?
ஆதவனின் வெம்மை பொறுக்காது
வான் சிந்தும் வியர்வைத்துளிகளே தூறலோ?
மின்னல் கண்டு அச்சம் கொண்ட
வானவரின் கண்ணீரே வாவியுறை நீரோ?
கரிசல் காண ஓடிவரும் கொண்டலின் அடர்முத்தக் குழந்தைதான் வான்மழையோ?
-