உனது புதிர் வார்த்தைகளையும் புரியாத உனது ஸ்மைலிகளையும் புன்னகை ஊடே ஒளிய திரியும் மௌனங்களையும் நட்சத்திர முத்திரையிட்டு கைபேசி குடுவைக்குள் இட்டு சேகரிக்கிறேன் இப்போதே..! விடியாத ஓர் இரவொன்றில் ஒவ்வொரு நட்சத்திரமாய் பெயர்த்து வானில் பதித்துவிட்டு, அதற்கான உன் விளக்கங்களை கேட்டு ஒர் அகராதி செய்யும் எண்ணத்தோடு..!
தூக்கிலிடும் அளவு நான் செய்யும் தவறுகளுக்கு எனை மன்னிக்காவிட்டாலும், மன்னிக்கும் படி நான் செய்யும் தவறுகளுக்கு என்னைத் தூக்கிலிடாது இருங்கள், நீங்களே என்னை மன்னித்த பல தவறுகளுக்கு நான் தினம் தினம் இன்னும் என்னை தூக்கிலிட்டுக் கொண்டிருக்கிறேன்.
கைகளில் ஏந்திய கூர்வாளுடன் எனை அழைப்பவர்களைக் கண்டு என்னாலும் எனக்கு பயமெதும் இல்லை அவர்கள் அழைப்பை ஏற்று ஆயுதமேதும் இன்றி அவர்களை நோக்கிப் படையெடுத்து விடுகிறேன்.
எனக்கு அவர்களிடத்தில் இருப்தெல்லாம் கவலையே அந்த வாளைக் கொண்டு அவர் குரல்வளைகளை அறுத்துக் கொள்வார்களோ என்று.
மாறாக அந்த வாளை அவர்கள் என் இதயத்தின் மீது பாய்ச்சும் போது, சிலர் என்னைக் கொன்று விட்டதாகவும், இன்னும் சிலர் என்னைக் காயப்படுத்தி விட்டதாகவும் எண்ணிக் கொள்கிறார்கள், மாறாக அவர்களால் எனக்குத் தர முடிந்நது எல்லாம் நிம்மதியை மட்டுமே அவர்கள் அதே வாள்கொண்டு தங்களை ஏதும் செய்து கொள்ளவில்லை எனும் நிம்மதியை மட்டுமே அவர்களால் எனக்குத் தர முடிகிறது.
அதே நிம்மதியுடனேயே அடுத்த வாளினை ஏந்திய கரங்களை நோக்கி பயணப்படுகிறேன்.
ஒரு நம்பிக்கையின் கிளை உடையவே வேறொரு நம்பிக்கையின் கிளைக்கு நம்பிக்கையுடன் தாவுவதை தவிர வேறு விதியேதும் இல்லை மனக்குரங்கிற்கு, எல்லா கிளையும் ஒர் நாள் விழும் என்பது தெரியும்வரை.
அங்கு அன்று இல்லாமல் போனாய் என்று யார் சொல்லும் அந்த நாளின் அத்தனையும் சந்தோஷமும் நீ.. பள்ளிக்கு விடுப்பெடுத்த அன்று அங்கு நடந்தாய் கூறும் அத்தனையும் நீ.. மனதில் நினைத்து எழுதவதற்குள் மறந்த கவிதையும் நீ... பளித்திடும் பயத்தினால் கண்டிடாத கனவும் நீ... தூரத்து தெரு விளக்கு அடியினில் மட்டும் பெய்யும் மழையும் நீ...
நீயிருக்கும் அறையின் கதவுகளை தட்டிக் கொண்டேயிருந்தேன், நீ திறந்த போதும், திறக்காத போதும், நீயில்லாத போதும், கண்களில் கண்ணீருடனும் கரங்களில் இரத்த வழியும் போதும் தட்டிக் கொண்டேயிருந்தேன் ஒரு போதும் வலித்ததேயில்லை.
நீயும் இல்லை அறையும் இல்லை தட்டுவதற்கு கதவுகளுங்கூட இல்லை வலிக்கிறது.
என் அன்பே..! உனக்கு எத்தனை பெயர்கள், காதல் அன்பு கவிதை கண்ணீர் கவலை முதல் காதல் மரணம் இவற்றில் எதை யார் உச்சரித்தாலும் உன் பெயராய் என் காதில் விழுகிறதே உன் பெயர் தான் என்ன ?